கிளர்வேந்தன் தன்னாடு வாட்டான் நன்றென்றல் வனப்பு - சிறுபஞ்ச மூலம் 8

நேரிசை வெண்பா

கண்வனப்புக் கண்ணோட்டங் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப் பித்துணையா மென்றுரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் றன்னாடு
வாட்டானன் றென்றல் வனப்பு. 8

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

கண்ணுக்கு அழகாவது பிறர்மேற் கண்ணோடி அன்பு செலுத்துதலாம்,

கால்களுக்கு அழகாவது பிறரிடத்தில் இரக்கப் போகாமையாம்,

ஆராய்ச்சிக்கு அழகாவது பொருளை அறுதியிட்டு முடிவு செய்தலாம்,

இசைக்கு அழகாவது அதனைக் கேட்டவர்கள் இது நல்லது என்று புகழ்ந்துரைத்தலாம்,

புகழினால் விளங்குகின்ற அரசனுக்கு அழகாவது தனது நாட்டிலுள்ள குடிகளை இவன் வருத்தித் துன்பந் தர மாட்டான், இவனுடைய ஆட்சி நல்லது என்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதலாகும்.

பொழிப்புரை:

கண்ணிற்கு வனப்பாவது பிறர்மேற் கண்ணோடுதல், காலிற்கு வனப்பாவது பிறரிடம் இரந்து செல்லாமை, ஆராய்ந்து சூழுஞ் சூழ்ச்சிக்கு வனப்பாவது இவ்வளவு இன்னதென்று துணிந்துரைத்தல், பாடும் பண்ணிற்கு வனப்பாவது கேட்டார் நன்றென்றல், படை கிளர்ந்தெழும் வேந்தற்கு வனப்பாவது தானாளும் நாட்டினை வருத்தான் மிகவும் நன்றென்றல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Dec-21, 7:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 216

மேலே