மாடமும் மண்ணீடுங் கண்டடக்க மில்லாரைக் கூடி வழிபடுங் கோள் – அறநெறிச்சாரம் 53
நேரிசை வெண்பா
மாடமும் மண்ணீடுங் கண்டடக்க மில்லாரைக்
கூடி வழிபடுங் கோள்அமை - ஆடரங்கின்
நோவகமாய் நின்றானோர் கூத்தினை ஊர்வேண்டிச்
சேவகமாய் நின்ற துடைத்து 53
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
சிறுவீட்டையும், பெரு மாளிகைகளையும் பார்த்து ஆசையை நீக்காத ஆசையுடையாரை தலைப்பட்டு ஆசிரியராகக் கொண்டு வழிபாடுசெய்யும் கொள்கை எப்படிப்பட்டதென்றால்,
அமைக்கப்பட்ட நடனசாலையில் தன் பிழைப்பு நோக்கி வருத்தமுடன் நிற்பவனாகிய கூத்தன் நடிக்க அவன், கொண்ட அரசகோலத்தைக் கண்டு மயங்கி அவனை ஊரார் தங்களை ஆள்கவென்று கூறிப் பணிசெய்து நிற்றலோ டொக்கும்.