மடங்கொண்டு அமிழ்தொழிய நல்லவனும் உண்ணுமோ நஞ்சு – அறநெறிச்சாரம் 56
நேரிசை வெண்பா
உடங்கமிழ்தங் கொண்டா னொருவன் பலரும்
விடங்கண்டு நன்றிதுவே என்றால் - மடங்கொண்டு
பல்லவர் கண்டது நன்றென் றமிழ்தொழிய
நல்லவனும் உண்ணுமோ நஞ்சு. 56
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
உயிரும் உடம்பும் கூடி நிற்றற்குக் காரணமாகிய தேவாமிர்தத்தினைப் பெற்ற ஒருவன்,
நஞ்சினைப் பார்த்துப் பலரும் இதுவே தேவாமிர்தமென்று கூறினாலும்,
பலர் கண்டதே உண்மையாக இருக்குமென்று நம்பி அமிழ்தத்தைப் பெற்ற நல்லவனும் அறியாமையை யுடையவனாய் கையிலுள்ள அமிர்தத்தை நீக்கி நஞ்சினை உண்பானோ? உண்ணான்.
கருத்து:
பலர் சொல்வதால் ஒரு பொய் உண்மையாகி விடாது.