அளிந்தார்கண் ஆயினும் ஆராயா னாகித் தெளிந்தான் விளிந்து விடும் - பழமொழி நானூறு 42
இன்னிசை வெண்பா
விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்
முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா
அளிந்தார்கண் ஆயினும் ஆராயா னாகித்
தெளிந்தான் விளிந்து விடும். 42
- பழமொழி நானூறு
பொருளுரை:
தம்மிடம் அன்புடையாரிடத்தாயினும் ஆராய்தல் இலனாகித் தெளிந்தவன் அழிந்து விடுவான்,
எப்பொழுதும் வெகுண்டாரே போல இருந்து அன்பின்மையின் வேறாகி நிற்கும் ஈரமற்றாரைத் தேற வேண்டாம் என்று உறுதியாகச் சொல்ல வேண்டுவதில்லை.
கருத்து:
தம்மிடம் அன்புடையாரிடத்தே ஆராயாது தம் மறையை வெளியிட்டார் கெடுவர் என்றால், பிறரை நம்பலாகாது என்பது சொல்ல வேண்டா.
விளக்கம்:
அன்புடையார் மாட்டே இஃதாயின் ஏனையோரிடத்துத் தேறவேண்டா என்பது கூறவேண்டா வாயிற்று.
'அளிந்தார்கண் ஆயினும் ஆராயானாகித் தெளிந்தான் விளிந்துவிடும்' என்பதுபழமொழி.