ஆராய்ந்து அறிந்துரைத்தல் ஆற்ற இனிது - இனியவை நாற்பது 31
இன்னிசை வெண்பா
அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது. 31
- இனியவை நாற்பது
பொருளுரை:
தம்மிடம் அடைக்கலம் புகுந்தவர் துன்பம் மிகாதவாறு செய்யும் உதவி இனியது.
கடன் வாங்கியாவது செய்ய வேண்டிய செயல்களைச் செய்வது இனியது.
சிறப்பாகக் கற்றறிந்த நூலறிவை உடையவரானாலும் சொல்ல வேண்டியதை ஆராய்ந்தறிந்தே ஒன்றைச் சொல்வது மிக இனியது.