இகல்மன்னன் சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செயும் - நீதிநெறி விளக்கம் 44

நேரிசை வெண்பா

இகழின் இகழ்ந்தாங் கிறைமகன் ஒன்று
புகழினும் ஒக்கப் புகழ்ப - இகல்மன்னன்
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செயும்
நீர்வழிப் பட்ட புணை 44

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

நீர் செல்லும் வழியே செல்லும் தெப்பம், (அதுபோல்) மக்கட்கூட்டம் வலிமையுடைய அரசனது ஆணை ஒழுங்கின் வழியே செல்லும்;

அவ்வழியிற் செல்லாது வேறு என்ன செய்யும்? அஃதெவ்வாறெனில், அரசன் ஒரு பொருளை இகழ்ந்தால் தாமும் அரசனோடு கூட அதை இகழ்ந்து, அவன் (அப்பொருளை) புகழ்ந்தால் தாமும்கூட ஒத்துப் புகழ்வர்.

விளக்கம்:

அரசனுறங்கினுஞ் சென்று உலகங் காக்கும் அவன் கடவுள் தன்மை, இங்குச் சீர் எனப்பட்டது.

ஒக்க – ஒத்து நிற்க.

கருத்து: அரசன் ஆணைவழியே குடிகள் ஒழுகுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-22, 9:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே