இகல்மன்னன் சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செயும் - நீதிநெறி விளக்கம் 44
நேரிசை வெண்பா
இகழின் இகழ்ந்தாங் கிறைமகன் ஒன்று
புகழினும் ஒக்கப் புகழ்ப - இகல்மன்னன்
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செயும்
நீர்வழிப் பட்ட புணை 44
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
நீர் செல்லும் வழியே செல்லும் தெப்பம், (அதுபோல்) மக்கட்கூட்டம் வலிமையுடைய அரசனது ஆணை ஒழுங்கின் வழியே செல்லும்;
அவ்வழியிற் செல்லாது வேறு என்ன செய்யும்? அஃதெவ்வாறெனில், அரசன் ஒரு பொருளை இகழ்ந்தால் தாமும் அரசனோடு கூட அதை இகழ்ந்து, அவன் (அப்பொருளை) புகழ்ந்தால் தாமும்கூட ஒத்துப் புகழ்வர்.
விளக்கம்:
அரசனுறங்கினுஞ் சென்று உலகங் காக்கும் அவன் கடவுள் தன்மை, இங்குச் சீர் எனப்பட்டது.
ஒக்க – ஒத்து நிற்க.
கருத்து: அரசன் ஆணைவழியே குடிகள் ஒழுகுவர்.