இரந்தார்க்கொன் றில்லென்றல் யார்க்கும் அரிது – நான்மணிக்கடிகை 49
இன்னிசை வெண்பா
சிறந்தார்க்(கு) அரிய செறுதலெஞ் ஞான்றும்
பிறந்தார்க்(கு) அரிய துணைதுறந்து வாழ்தல்
வரைந்தார்க்(கு) அரிய வகுத்தூண் இரந்தார்க்கொன்
றில்லென்றல் யார்க்கும் அரிது 49
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
நட்பிற் சிறந்தவர்களுக்கு தம் நண்பரைப் பிழை செய்த வழியுஞ் சினந்து நீக்குஞ் செயல்கள் இலவாம்;
உயர் குடியிற் பிறந்த மேலோர்க்கு எக்காலத்திலும் தமக்குத் துணையான சுற்றங்களை நீங்கி இன்ப வாழ்வில் வைகும் வகைகள் இல;
உணவின் பொருட் செலவைத் தமக்கென்றே அளவு செய்து வாழ்கின்றவர்களுக்கு பிறர்க்குப் பகுத்தளித்து உண்ணு நிகழ்ச்சிகள் இல;
ஈரநெஞ்சமுடையாரெவர்க்கும் தம்பால் வந்து இரந்து கேட்பவர்கட்கு ஒரு பொருள் இல்லையென்று மறுத்துக் கூறுதல் இல்லை.
கருத்து:
சிறந்த நண்பர்கள் தம்முள் ஒருவரையொருவர் சினந்து கொள்ளார்;
உயர்குடிப்பிறப்பினர் தம் இனத்தாரை நீங்கி வாழார்;
தமக்காகவே செலவு செய்கின்றவர்கள் பிறர்க்குப் பகுத்துண்டல் செய்வாரல்லர்; அருளுடையவரெல்லாரும் இரந்தார்க்கு இல்லையென்று சொல்லார்.
விளக்கவுரை:
‘அரிய' வென்பது பலவின் முற்றானமையின், ‘செறுதல்' ‘வாழ்தல்' ‘உண்டல்' என்பவற்றிற்குப் பன்மைப் பொருள் உரைத்துக் கொள்க.
‘எஞ்ஞான்று' மென்பதை ஏனையவற்றிற்குங் கூட்டிப் பிழை செய்த காலத்தும், இடுக்கான காலத்தும், செல்வம் மிக்க காலத்தும், வறுமையுற்ற காலத்துமெனக் கருத்துரைத்துக் கொள்ளல் சிறப்பாகும்.