கைவரும் வேந்தன் நமக்கென்று செவ்வி தெரியாது உரையற்க - நீதிநெறி விளக்கம் 46

நேரிசை வெண்பா
(கைவ்வரும் என்று ஒலிக்கும்)
(’கை’ - க மோனை, ‘ய்’ இடையின ஆசு,
’வ்’ மறைந்து ஒலிக்கும் எதுகை)

கைவரும் வேந்தன் நமக்கென்று காதலித்த
செவ்வி தெரியா(து) உரையற்க - ஒவ்வொருகால்
எண்மைய னேனும் அரியன் பெரிதம்மா
கண்ணிலன் உள்வெயர்ப்பி னான் 46

- நீதிநெறி விளக்கம்

குறிப்பு:

’கைவரும்’ என்ற முதலடி முதற்சீர் ‘கய்வ்’ என்று விரிந்து க மோனையாகவும், வ் எதுகையாகவும் ஆகும். இடையிலுள்ள ‘ய்’ என்பது இடையின ஆசு எனப்படும்.

பொருளுரை:

அரசன் நமக்கு இசைந்து வருவான் என்று கருதி விரும்பினவற்றை அவனிடம் சொல்லக் கூடிய காலந் தெரியாமல் சொல்லவேண்டாம்;

சிற்சில நேரங்களில் (அவன் காணுதற்கு) எளியனானாலும் பெரும்பாலும் காண்டற்கும் பேசுதற்கும் அரியனாவன்; மேலும், அவன் கண்ணோட்டம் இல்லாதவன்; உள்ளத்தே சினமுமுடையவன்.

விளக்கம்:

உறவினர் அயலார் என நோக்காது அறநெறி நின்று அந்நெறி பிறழ்ந்தாரைத் தண்டித்தலும், காலம் வருமளவும் பகைவரறியாமல் உள்ளே சினங் கொள்ளலும் இயல்பாதலால் கண் இலன், உள் வெயர்ப்பினான் என்றார்;

அரசனைக் கண்டு தத்தம் குறைபாடுகளைக் கூறப் பற்பல அதிகாரிகளும் புலவர்களும், குடிகளும் அயல்நாட்டு மன்னரின் தூதுவர் முதலியோரும் நேரம் பார்த்து நிற்பர். அரசன் எல்லோரையும் உசாவி அவரவர்க்கு மறுமொழி சொல்வதில் எப்போதும் ஆவலுடையவனாயிருப்பான்.

மேலும், அவரவர்க்கு ஏற்ற வகையில் அவரவர் குறைகள் நீக்க நெடுநேரம் ஆழ்ந்து கருத வேண்டியவனாயும் இருப்பான்.

அவ்வமயங்களில் அவன் மனநிலை தெரியாமல் எவ்வளவு உயிர்த்தோழராயிருந்தாலுங் காலமறியாமல் அவனிடம் ஏதாவது மொழிந்தால் அவன் சிந்தனை சிதறுண்டு அதனாலவன் சீற்றங் கொள்வான். ஆதலின், செவ்வியறிந்துரைக்க வென்பது.

கருத்து:

அரசன் நம்மிடம் அன்புடையவனாயிருப்பினும் அவனிடம் காலமறிந்தே நாம் விரும்பியவற்றைச் சொல்ல வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jan-22, 4:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கட்டுரைகள்

மேலே