இறைமாண்டார்க்கு ஏதிலரும் ஆர்வலரும் இல்லை அவர்க்கு - நீதிநெறி விளக்கம் 47
இன்னிசை வெண்பா
பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்
கிழமை பிறிதொன்றுங் கொள்ளார் - வெகுளின்மன்
காதன்மை உண்டே இறைமாண்டார்க்(கு) ஏதிலரும்
ஆர்வலரும் இல்லை அவர்க்கு 47
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
அரசர் மிகுதியாகக் கோபித்தால் இவர் நமக்கு அரசியலின் தொன்று தொட்டுப் பணியாற்றி வருபவர் என்பதையும் நிலை நிறுத்தார்; இவர் நமக்கு நண்பர் என்பதையும் கவனியார்; அவை ஒழிய, இவர் நமக்கு உரியவர் என்பதையும் சிறிதும் நினையார்;
ஆதலால், அரசியலில் அகப்பட்டார்க்கு அன்புடைமையுண்டோ? அவ்வரசர்க்கு இவர் அயலாரெனவும், இவர் அன்புடையரெனவும் கிடையாது.
விளக்கம்:
அரசர் சினங்கொள்வாராயின், அயலாரெனவும் அன்புடையாரெனவும் பாரார்என்பதற்குச் சோழ மன்னன் ஒரு பசுவினதுகன்றின்பொருட்டுத் தன் புதல்வன் செய்த குற்றத்திற்காக அவனையே கீழே கிடத்தி அவன் மேல் தேரூர்ந்த வரலாறு சான்றாகும்.
பழமை, கிழமை இரண்டும் பண்பாகு பெயர்கள். மன்: மிகுதியுணர்த்திற்று. ஆர்வம் - அன்பு; இதனையுடையார்ஆர்வலர்.
அரசர்க்குக் கோபம் பிறந்தால் அவர் கட்டளைக்கு எதிர்த்து நிற்றல் இயலாது.
அரசர் கோபத்திற்கு உற்றார், உறவினர் என்பது கிடையாது.
"வேந்தன் சீறின் ஆந்துணை யில்லை"
"மன்னரை யடைந்து வாழ்தல் வஞ்ச நஞ்கடைய நாகந் தன்னொடு கூடி வாழுந்தன்மை" என்பன காண்க.
கருத்து:
எவரும் அரசரிடம் உரிமை கொள்ளல் இயலாது.