சட்ட மாமேதை பீமாராவ் டாக்டர் பிஆர் அம்பேத்கர்
சொல்லை வில்லாய் மாற்றும்
கல்விக்குக் கலங்கரை விளக்கம்,
புரட்சியாளர், சட்ட மாமேதை
பீமாராவ் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்.
ஏழ்மை ஏளனம் செய்த போதும்
தாழ்வு மனம் கொள்ளாமல்
சட்டம் படிக்க வேட்கை கொண்டு - வெளி
நாட்டில் பயின்று மேதையானவர்.
மேலை நாடுகளில் சட்டம் பயின்று
மேன்மையுறவே கற்றுத் தேர்ந்து
நாட்டின் முன்னேற்றம் கருதி
மத்திய அரசின் மதிமந்திரியாய்
சட்டங்கள் வடிவமைத்து அதனைத்
திட்டங்களாய்ச் செயல்படுத்தியவர்.
கற்பி! ஒன்று சேர்! போராடு!
சிற்பி என முனைப்பு கொள்
சிந்தனைக்கு இடம் கொடு
சீர் பகுத்தறிவால் நிமிர்ந்து நில்!
என்றே
மக்கள் நெஞ்சில் முளைப்பு
மங்கா விதைகளை விதைத்தவர்.
கல்விகற்றலின் இலக்கணம்
புலம்புதல் மறந்து பாயும்
புலியாய் வீறு கொள் என்றே
புதுப்பாடம் புகன்ற புரட்சியாளர்
பன்முகம் கொண்ட இனியவர்
பன்மொழிப் புலவர் வல்லுநர்
"மூக்நாயக்" இதழின் முதல்வர்
மக்கள் ஆட்சி மகத்துவம்
மனிதம் நிறை பௌத்தம்
தத்துவ பயிற்சிப் பள்ளி
முத்தெனவே முன்மொழிந்தவர்
சாதி, மத, பேதம் அற்ற
சமூக நல்லிணக்கம் வளர்க்கும்
சமத்துவம் சமதர்மம் செழிக்கச்
சகோதரத்துவம் போற்றிய அறிஞர்.
.
அறிவுச் சுடரொளியே எனினும்
அடக்கத்தின் பேரொளி சின்னம்
ஆற்றலின் அடையாளம், எழுச்சியின்
அறிமுகம், புரட்சியின் பூர்வீகம்,
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை
இணையில்லா சொல்லாடல் வல்லுநர்
சட்டம் பயில்வோர் வாதிடுவோர்
சகல மக்களின் சற்குருவானவர்.
அகம் நிறைந்த அண்ணலை
வாழ்த்துவோமே!
சேவையால் சிறந்த அவர் புகழ் போற்றுவோமே.