சீரேற்ற பேரமைச்சர் கோள் மூன்று - திரிகடுகம் 61

நேரிசை வெண்பா

ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
எய்துவ தெய்தாமை முற்காத்தல் - வைகலும்
மாறேற்கும் மன்னர் நிலையறிதல் இம்மூன்றும்
சீரேற்ற பேரமைச்சர் கோள் 61

- திரிகடுகம்

பொருளுரை:

ஐம்பொறிகளின் அறிவும், தீயவழியில் செல்லாது தம்மிடத்து அடங்கி நிற்கும்படி நடத்தலும், அரசனுக்கு வருவதாகிய தீங்கை வராதபடி முன் அறிந்து தடுத்தலும், நாடோறும் தம்முடைய பகைமையை ஏற்றுக் கொள்ளுதற்குரிய அரசருடைய இருப்பை ஒற்றர்களால் அறிந்து அதற்குத் தக்கபடி செய்தல் ஆகிய இந்த மூன்றும் புகழை மேற்கொண்ட பெருமையுடைய அமைச்சர்களின் துணிவுகளாம்.

கருத்துரை:

பேரமைச்சர்கள் ஐம்பொறிகளை அடக்கி நடத்தவும், அரசனுக்குத் தீங்கு வராமல் காக்கவும், பகைவருடைய நிலைமையை அறிந்து நடக்கவும் வல்லவர்களாயிருக்க வேண்டும்.

ஐம்பொறிகள் - மெய், வாய், கண், மூக்கு, செவி,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-22, 3:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே