கோள்மொழி கேட்கும் குணமிலிகள் மூவர் - அறநெறிச்சாரம் 62
நேரிசை வெண்பா
கண்டதனைத் தேறா தவனுங் கனாக்கண்டு
பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும் - பண்டிதனாய்
வாழ்விப்பக் கொண்டானும் போல்வரே வையத்துக்
கோள்விற்பக் கொள்ளாநின் றார் 62
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
பூமியில் பொய்யை மெய்யென்று கூறி விற்க அதனை விலை கொடுத்து வாங்குவோர்
தானே நேரில் பார்த்ததைத் தெளியாதவனும், கனவில் தன் மனைவி அயலானைச் சேர்ந்திருக்கக் கண்டு அதனை உண்மையென மயங்கி அவளைக் கொன்றவனும், பண்டிதனாக இருந்தும் தனது நல்வாழ்க்கைக்குப் பிறருதவியை நாடுபவனும் போன்று அறிவிலிகளேயாவர்.
குறிப்பு:
கோள், பிறர்மேல் இல்லது கூறலாதலின் பொய் எனப்பட்டது.