தான்கொடுக்குஞ் சோற்றான்வீ றெய்துங் குடி – நான்மணிக்கடிகை 70

நேரிசை வெண்பா

பதிநன்று பல்லார் உறையின்; ஒருவன்
மதிநன்று மாசறக் கற்பின்; - நுதிமருப்பின்
ஏற்றான்வீ றெய்தும் இனநிரை; தான்கொடுக்குஞ்
சோற்றான்வீ றெய்துங் குடி! 70

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

பலரும் நிறைந்து ஒத்து வாழ்வார்களானால் ஊர் நன்றாகும்;

குற்றமறும்படி கற்பனாயின் ஒருவனது அறிவு தெளிவுபெறும்;

ஆனிரைகள் கூரிய கொம்புகளையுடைய எருதுகளால் சிறப்படையும்;

தான் ஏழைகட்குக் கொடுக்கும் உணவினால் தான் பிறந்த குடி பெருமையடையும்.

கருத்து:

பலரும் நிறைந்து ஒத்து உறைவாரானால் ஊர் நன்றாம்; ஒருவன் ஐயந்திரிபறக் கற்பானானால் அவன் மதி நன்றாகும்;

ஆனிரைகள் கூர்ங்கொம்புகளையுடைய ஏறுகள் உடனிருந்தலால் சிறப்படையும்; ஏழைகட்கு உணவளிப்பதனால் ஒருவனது குடி மேலோங்கும்.

விளக்கவுரை:

பல்லாரென்றதை இங்கே முயற்சியும் ஒற்றுமையுமுடைய நன்மக்கள் பல்லாரென்று கொள்க;
அவர் அல்லாராயின் ஊர் நன்றாகாது சோம்பும். கல்வி கற்றற்குக் குற்றமாவன ஐயந் திரிபுகள்;

ஏற்றுக்கு நுதிமருப்பென்று அடைவந்தமையின் ஏற்றான் வீறெய்து மென்றவிடத்து வீறு வெற்றியெனக் கொள்க. பின்வந்த வீறு சிறப்பெனப் பொருள்படும். சோற்றோடு உடையெனவுங் கொள்ளலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-22, 11:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே