இடரின்னா நட்டார்கண் ஈயாமை யின்னா - சிறுபஞ்ச மூலம் 13

நேரிசை வெண்பா

இடரின்னா நட்டார்கண் ஈயாமை யின்னா
தொடர்பின்னா நள்ளார்கட் டூயார்ப் – படர்பின்னா;
கண்ட லவிர்பூங் கதுப்பினாய் இன்னாதே
கொண்ட விரதங் குறைவு 13

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

தாழைமலர் முடிக்கப்பட்டு விளங்குகின்ற அழகிய கூந்தலையுடையவளே!

நண்பர்களுக்குச் செய்யுந் துன்பம் தீது, அவர்கள் இடருற்ற காலத்தில் அவர்க்கு வேண்டும் பொருளைக் கொடாதிருத்தல் தீது,

பகைவரிடத்து நட்புக் கொள்ளுதல் தீது; உளத்தூய்மை யுடையவரை விட்டு நீங்குதல் தீது. ஒருவன் கைக்கொண்ட நோன்பில் குறைவுபடுதல் தீது!

கண்டலவிர் பூங்கதுப்பினாய் - மகடுஉ முன்னிலை,

நட்டார்கண் என்பது தீபமாக இரண்டிடத்துங் கூட்டப்பட்டது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Mar-22, 7:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே