யாரானும் சொற்சோரா தாரோ இலர் – பழமொழி நானூறு 94
இன்னிசை வெண்பா
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்?
கற்பால் இலங்கருவி நாட!மற்றி யாரானும்
சொற்சோரா தாரோ இலர். 94
– பழமொழி நானூறு
பொருளுரை:
மலைகளிடத்து விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே!
நல்ல குடியின்கட் பிறந்து நல்லனவற்றைக் கற்றாரும், சில நேரங்களில் ஆராய்தலிலராய்ப் பிழைபடச் சொல்வார்கள்; நல்ல குடியின்கட் பிறவாதார் சொற்களிலுள்ள இன்னாமையும் பிழைகளுமாகிய இயல்பின்மையை நினைந்து வருந்துவது ஏன்?
யாவரே யாயினும் சொல்லில் சோர்வுபடாதார் இல்லை.
கருத்து:
யாவர் மாட்டும் சொற்சோர்வு உண்மையான், கருத்து ஒன்றனையே நோக்குக.
விளக்கம்:
நல்லன கூறுதற்கும் அல்லன கூறுதற்கும் குடிப்பிறப்பு காரணமாயிற்று.
நல்ல குடிப்பிறந்தார் சொற்சோர்வு படார்; சில நேரங்களில் அவரும் உலக வாசனையால் சோர்வுபடுதலின் யாராயிருந்தாலும் கருத்தொன்றனையே நோக்குக என்பதாயிற்று.
'யாரானும் சொற் சோராதாரோ இலர்' என்பது பழமொழி.