தீய மக்களினும் விலங்குகள் மிக நல்லன – அறநெறிச்சாரம் 122
நேரிசை வெண்பா
(’க்’ ‘ச்’ வல்லின எதுகை)
இக்காலத் திவ்வுடம்பு செல்லும் வகையினால்
பொச்சாவாப் போற்றித்தாம் நோற்பாரை - மெச்சா(து)
அலந்துதம் வாய்வந்த கூறும் அவரின்
விலங்குகள் நல்ல மிக. 122
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
இவ்வுடல் இப்பொழுதே அழியுந் தன்மையாயிருத்தலை அறிந்து மறவாமல் குறித்துக் கொண்டு மறம் தங்கண் நிகழாதபடித் தம்மைப் பாதுகாத்துத் தவம் முயல்கின்றவரை புகழாமல்,
நொந்து தம் வாயில் வந்த சொற்களைச் சொல்லி இகழுகின்றவர்களைக் காட்டிலும் மிருகங்கள் மிக நல்லனவாகும்.
குறிப்பு:
இகழ்வால் வரும் பாவத்தை அடையாமையின் விலங்குகள் நல்லனவாயின.