கண்ணதாசனுக்கு சமர்ப்பணம்
கண்ணதாசனுக்கு சமர்ப்பணம்
கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே
என்று ஆரம்பித்த கலைப்பயணம்....
கண் மூடும் வேளையிலும்
கலை ஒன்றே உயிராக
உள்ளத்தில் நல்ல உள்ளமாக
உலகம் பிறந்தது எனக்காக என்று தொடங்கினேன்......
காதலிக்க நேரமில்லை என்றவனை
கல்லிலே கலை வண்ணம் காண வைத்து
கண்களின் வார்த்தைகளை அறிய வைத்து
காதல் சிறகை காற்றினில் விரித்தாய்....
நீரோடும் வைகையில்
நான் மலரோடு தனியாக நிற்கும் வேளையில்
நிலவென்னும் ஆடை கொண்டவள்
நடையா இது நடையா என நடை போட்டு
நெஞ்சத்திலே நீ என்னுள் வந்தாய்.....
என்னருகே நீ இருக்கும் பொழுதில்
மௌனமே பார்வையாக
மயக்கமா கலக்கமா என தெரியாமல்
அனுபவம் புதுமையாக
ஆகாயப்பந்தலில் பொன்னூஞ்சல் ஆட வைத்தாய்....
ஓடும் மேகங்களை என் சொல் கேட்க வைத்து
ஒளிமயமான எதிர்காலம் அளித்து
பாட்டும் நானே பாவமும் நானே
என உயிர் கொடுத்து
பாடாத பாட்டெல்லாம் பாட வைத்து
எல்லோரும் கொண்டாட வைத்தாய்....
என்னை மறந்தது ஏன் என்று உருக வைத்து
ஏன் பிறந்தாய் என வருந்த செய்து
நினைப்பதெல்லாம் நடந்து விடாது என்றுரைத்து
நினைக்க தெரிந்த மனமே நீ மறந்து விடு என மறைந்துவிட்டாய்....
போனால் போகட்டும் போடா எனத் திரிந்து
எங்கேயும் எப்போதும்
சொர்க்கம் மதுவிலே என அலைந்து
சோதனை மேல் சோதனை கொண்டேன்.....
ஆறு மனமே ஆறு எனத் தெளிந்து
சிந்தனை செய் மனமே என உருகி
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமாக
தெய்வமே தெய்வமே என உணர்ந்தேன்....
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும்
பூங்காற்று புதிதாக பிறக்க
ராகங்கள் பதினாறை உயிர்பித்து
ஏழு ஸ்வரங்களுக்குள் ராகத்தை தேடி
கண்ணே கலைமானே என்று
கரைந்தேனே கவிதையாய் என்றும் இங்கு....
சாந்தீஸ்வரி ராஜாங்கம்