புலம்புகின் தீநாய் எழுப்புமாம் எண்கு - பழமொழி நானூறு 139
இன்னிசை வெண்பா
பெரியாரைச் சார்ந்தார்மேல் பேதைமை கந்தாச்
சிறியார் முரண்கொண்(டு) ஒழுகல் - வெறியொலி
கோநாய் இனம்வெரூஉம் வெற்ப! புலம்புகின்
தீநாய் எழுப்புமாம் எண்கு. 139
- பழமொழி நானூறு
பொருளுரை:
வெறியாட்டெடுக்கும் ஒலியைக் கேட்டு ஓநாய்க் கூட்டங்கள் அஞ்சுகின்ற மலைநாட்டை யுடையவனே!
வலிமையிற் சிறியவர்கள் வலிமையால் பெரியோர்களைச் சார்ந்து நிற்பவர்களிடம் அறியாமையையே பற்றுக் கோடாகக் கொண்டு, மாறுபாடு கொண்டு ஒழுகுதல்,
தீய நாய் நாட்டில் புகுந்தால் உறங்குகின்ற கரடியை எழுப்புகின்றதை ஒக்கும்.
கருத்து:
வலியாற் பெரியார் மீது மாறுபட்டு நிற்றலை ஒழிதலேயன்றி அவரைச் சார்ந்தார் மீதும் அங்ஙனமே யாகுக என்றது இது.
விளக்கம்:
வலியாற் பெரியார்க்குள்ளன அவரைச் சார்ந்தொழுகுவார்க்கும் உள்ளதால் அவரிடத்தும் மாறுபட்டு நிற்றலையொழிக என்பது; ஒழுகல் என்பது மகனெனல் என்றாற் போன்று எதிர்மறைப் பொருளில் நின்றது.
தனக்கே தீங்கு விளைத்துக் கோடலின் தீ நாய் எனப்பட்டது; சிறியார் பெரியாரைச் சார்ந்தார் மீது மாறுபட்டு நிற்றல் தமக்குத் தாமே தீங்கினை விளைவித்துக் கொள்வதாக முடியும்.
'புலம்புகின் தீநாய் எழுப்புமாம் எண்கு' என்பது பழமொழி.