சான்றவர் சொல்லார் பொருண்மேல் படாஅ விடுபாக்கு அறிந்து – நாலடியார் 255
நேரிசை வெண்பா
புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
கல்லாத சொல்லுங் கடையெல்லாம் - கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக்(கு) அறிந்து 255
- அறிவின்மை, நாலடியார்
பொருளுரை:
அறிவு நிரம்பாத கீழ்மக்களெல்லாரும் அவ்வாறே மெய்யறிவோடு பொருந்தாத புல்லறிவுக் கூட்டத்தவரான தாழ்ந்த புலவர் நடுவிற் புகுந்து தாம் தெளிவாகக் கல்லாத கருத்துக்களையெல்லாம் ஆரவாரமாக விரித்துரைப்பர்;
ஆனால், அறிவு நிரம்பிய பெருமக்களோ, தாம் கற்ற கருத்துக்களைப் பிறர் வினவினாலும் அந்நுண்பொருள்கள் மேல் அவரறிவு கூரிதாகச் செல்லமாட்டாமல் விட்டுப் போதல் தெரிந்து அவற்றைக் கூறாமல் அடக்கமாயிருப்பர்.
கருத்து:
அறிவின்மையுடையார் அறிவுடையாரைப் போல் அடக்கமாயிரார்.
விளக்கம்:
புலவரில் தாழ்தரமானவர், ஈண்டுப் ‘புல்லாப் புன்கோட்டிப் புலவர்' எனப்பட்டார். கடையெல்லாம் - கீழ்மக்களெல்லாரும்; 'படாவிடுபாகு' என்றமையான், பொருள் நுண்பொருளெனப் பெறப்பட்டுச் சான்றவர் தம் நுண்ணறிவைப் புலப்படுத்தா நின்றது.