கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா நோலா உடம்பிற்கு அறிவு – நாலடியார் 258
நேரிசை வெண்பா
(இடையின எதுகை)
பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக்(கு) - இருந்தன்று!
கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா
நோலா உடம்பிற் கறிவு 258
- அறிவின்மை, நாலடியார்
பொருளுரை:
பலநாள் பாலினாற் கழுவி உலர்த்தினாலும் வெண்ணிறம் உடையதாம் நிலைமை கரிக்கு இல்லை;
அவ்வாறே, கோலால் அதட்டிக் குத்திக் கூறினும் புண்ணியஞ் செய்யாத உடம்பில் அறிவு ஏறாது.
கருத்து:
அறிவில்லார் புண்ணியமில்லாதவர் ஆதலின் அவர் திருந்துதல் அருமையாயிருக்கும்.
விளக்கம்:
உவமையால் நன்முறையால் திருத்துதலும், பொருளால் அச்சுறுத்தித் திருத்தலும் பெறப்பட்டன.
இருந்தை என்பது கரி: இருமை கருமையாகலின் அப்பெயர் பெற்றது.
புகலொல்லா: ஒரு சொல், கீழ்மக்களின் இழிவு கருதி அவரை ‘நோலா உடம்பு' என்று விதந்தார்.