இழிந்தவை தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த் தேற்றச்சொல் – நாலடியார் 259
நேரிசை வெண்பா
பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லா(து)
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல் - இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு 259
- அறிவின்மை, நாலடியார்
பொருளுரை:
தேன் சொரிந்து இனிது மணந்தாலும் மலரை உண்ணுதற்குச் செல்லாமல் இழிந்த பொருள்களையே விரும்பும் ஈயைப்போல், இழிந்த குணங்களே பொருந்திய மனமுடையார்க்குத் தகுதியுடையார் வாயினின்று வரும் இனிமை பொருந்திய தெளிந்த அறிவுரைகளின் தெரிவுநிலை என்ன பயனைத் தரும்?
கருத்து:
அறிவில்லார் இழிந்த இயல்புகளையே நாடுவர்.
விளக்கம்:
பூமிசைதல் என்பது தேன் மிசைதல், "பூவுண் வண்டு"1 என்பழிப்போல;
நெஞ்சினார்க்கு - புல்லறிவினார்க்கு; தெரிந்தெடுக்கப்பட்ட தகுதிநிலை ஈண்டுத் தேர்வெனப்பட்டது.
சொற்களுள் இவை உயர்வென்று சிறந்தோரால் தெரிந்தெடுக்கப்பட்ட அவற்றின் தகுதிநிலை;
இழிந்தவை கலந்த நெஞ்சினார்க்கு யாது பயன்றரும் என்பது பொருள்.