விரைவில் வந்து என்னை முழுமையாக்கு

அம்மா வீட்டிற்கு போய்ட்டு வரட்டுமா
என ஆசையாய் கேட்டதும்
ஏதோ நியாபகத்தில்
சரி
என்று கூறிவிட்டேன்..

நீ ..
பேருந்தில் ஏறிக் கொள்ளும் வரை
எதுவும் தோன்றவில்லை
பேருந்து கிளம்பியதும்
மனதில் ஏற்பட்ட கலவரங்கள்
சொல்லில் முடியாது..

நீ வைத்துப் போன வத்தல் குழம்பும்
தக்காளித் தொக்கும்
இரண்டொரு நாட்களில்
தீர்ந்து போக
சமயலறை பக்கமாய்
உன் வாசம் தேடி
தேம்புகிறது மனது

நான் செய்த உப்பில்லா உணவுகள் பற்றி
உன்னிடம் குறைகள் கூற காத்திருக்கிறது
நம் வீட்டு
சமையல் பாத்திரங்கள்

பக்கத்தில் உன் ஸ்பரிசம் இல்லாமல்
இரவுகள் சுருங்கி பகல்கள் நீண்டு விட்டது
நீ அடிக்கடி உடுத்திக் கொள்ளும்
புடவைகளில் ஒன்றை விரித்து
அதில்
கொஞ்சமாய் உறங்கிப் போகிறேன்
இப்போதெல்லாம்..


கண்ணாடியில் நீ ஒட்டி வைத்த
ஸ்டிக்கர் பொட்டுகளுக்கிடையே
தினம் சிக்கித் தவிக்கிறேன்..

மாலையில்
வீடு வந்து சேர்கையில்
என்னை வரவேற்கும்
உன் புன்னகையை
வீடு முழுவதுமாய் தேடித் திரிகிறேன்..

சொர்க்கமாக
இருந்த வீடு
நரகமாக
தெரிகிறது
எனக்கு.,

ஆண்டுக் கணக்கில்
தனிமையில் வாழ்ந்திருக்கிறேன்
அப்போதெல்லாம் தோன்றாத வலிகளை
வந்த
ஆறே மாதத்தில்
அறிமுகம் செய்து விட்டாய்.,

அன்பே..
நீ இல்லாமல் நான்
முழுமையற்றவனாய் உணர்கிறேன்
விரைவில் வந்து
என்னை முழுமையாக்கு..


அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (27-Jul-22, 8:57 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 48

மேலே