இன்பமும் துன்பமும் ஒன்றென எண்ணுக – அறநெறிச்சாரம் 150
நேரிசை வெண்பா
பேறழிவு சாவு பிறப்பின்பந் துன்பமென்
றாறுள அந்நாள் அமைந்தன - தேறி
அவையவை வந்தால் அழுங்காது விம்மா(து)
இவையிவை என்றுணரற் பாற்று 150
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
செல்வமும், வறுமையும், இறப்பும், பிறப்பும், இன்பமும், துன்பமும் என்று சொல்லப்படுகின்ற ஆறும் முன்செய்த வினை காரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன;
இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை மாறி மாறி வருந்தோறும் வருந்தாமலும், மகிழாமலும் நம்மை நாடி வந்த இவை இன்ன வினைகளால் வந்தவை என்று ஆராய்ந்தறிந்து அடங்குதலே செயத்தக்கது.