லவரயஅப் பாராதிக் கென்றும் அழுத்தமதாய் நிற்கும் அது - உண்மை விளக்கம் 5
திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா
பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு
வன்கால் கருமைவளர் வான்தூமம் – என்பார்
எழுத்து லவரயஅப் பாராதிக் கென்றும்
அழுத்தமதாய் நிற்கும் அது. 5
- உண்மை விளக்கம்
பொழிப்புரை:
பிருதிவியானது பொன்னிறமாயிருக்கும், அப்புவானது வெள்ளை நிறமாயிருக்கும், மிகுகின்ற தேயுவானது சிவந்த நிறமாய் நிற்கும், வலிய வாயுவானது கருமை நிறமாயிருக்கும், மிகுந்த ஆகாயமானது புகைநிறமாய் இருக்கும் என்று பெரியோர் சொல்லுவர்,
பிருதிவி முதலியவற்றிற்கு முறையே லகாரமும் வகாரமும் ரகாரமும் யகாரமும் அகாரமும் ஆகிய எழுத்து எப்போதும் பலமாய்ப் பொருந்தி நிற்கும்
பிருதிவி – பூமி, நிலம், புனல் – அப்பு, நீர், அனல் – நெருப்பு, கால் – காற்று, வான் – ஆகாயம்
குறிப்பு: லகாரமும் வகாரமும் ரகாரமும் யகாரமும் அகாரமும் ஆகிய எழுத்து பொருள் புரியவில்லை; யாராவது விளக்கலாம்.