மறுமை யறியாதார் ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை – நாலடியார் 275
இன்னிசை வெண்பா
எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற் றூறல்பார்த் துண்பர்
மறுமை யறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை 275
- ஈயாமை, நாலடியார்
பொருளுரை:
அலை வீசுகின்ற நீர்ப்பெருக்கினை உடைய பெரிய கடலை அடுத்திருந்தும் அதன் நீர் பயன்படாமையால் அடிக்கடி நீர் வற்றுகின்ற சிறிய கிணற்றின் ஊற்றையே மக்கள் தேடிக் கண்டு உண்பர்;
ஆதலால் மறுமைப் பயனன் அறியாதொழுகும் புல்லியோர் செல்வத்தினும் குணம் நிறைந்த பெரியோரது மிக்க வறுமையே மேலானதாகும்.
கருத்து:
ஈயாதார் பெருஞ்செல்வராய் இருப்பினும் அவரால் நன்மையில்லை.
விளக்கம்:
சான்றோரது சிறிய உதவியும் சற்றும் தீங்கற்றதாய் இருமை நலங்களும் பயப்பிக்குமாகலின், தலையென்றார்.