வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் மழுங்க வரின் – நாலடியார் 300
நேரிசை வெண்பா
கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்; - இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் மழுங்க வரின் 300
- மானம், நாலடியார்
பொருளுரை:
மதம் பொருந்திய யானையை அதன் வலிமையைத் தொலைத்து வீழ்த்திய காட்டிலுறையும் புலி தனக்கு இடப்பக்கம் வீழ்ந்த அந்த யானையை, தான் பசிமிகுதியால் உயிர் துறக்குந் தறுவாயில் இருப்பினும், உண்ணாமல் உயிர்விடும்;
ஆதலால் செல்வப் பெருக்குடைய துறக்கவுலகம் தானே தம் கையகப்படினும் அது தமது மானம் கெட வருவதாயின் அதனைப் பெரியோர் விரும்பார்.
கருத்து:
மானத்தால் உண்டாகும் இன்பமே இன்பமாகும்
விளக்கம்:
‘இடமுடைய வானகம்' என்றவிடத்து இடம் என்றது வளம் உணர்த்தும்; "இடமில்லாக் காலும்"2 என்புழிப் போல. ஈண்டுப் போகம் உணர்த்திற்று. ‘கையுறின்' என்றது கிடைத்தாலும் என்னும் பொருட்டு;
‘மழுங்க' வென்னுங் குறிப்பாற், பெரியார்களுக்குள்ள மேன்மையெல்லாம் அவர்கள்பால் இம் மானம் என்னும் உயர் குணம் ஒன்று என்றும் பொன்றாது சுடர்விட்டுக் கொண்டிருப்பதுதான் என்பது பெறப்படும்.