பூக்களோடு ஒருத் தீ
அனுதினமும்
அதிகாலை
நீ பூக்களை பறிக்க
தொடங்குகின்றாய்
உனக்காகவே பூக்களும்
மலர்ந்தனவோ
இத்தனைக்கும்
நீ பூக்களை சூடவோ
பூஜை செய்வதோ
இல்லை
அலங்காரத்திற்கும்
அர்ச்சனைக்கும்
மட்டுமா பூக்கள்
என்கிறாய்
உன் விநோதங்கள்
எனக்கு புலப்படவில்லை
என்றோ ஒருநாள்
உன் அறையிலிருந்து
எழுந்த சாம்பல்
வாசம் மூக்கை
நெருடியது
பதறி அறைக்குள்
நுழைந்தேன்
அங்கு பூக்களின்
ஒவ்வொரு இதழையும்
தீமூட்டி கொண்டிருந்தாய்
என்ன செய்கிறாய் நீ
இறந்துபோன பூக்களை
தகனம் செய்கிறேன்
பூக்கள் இறக்குமா
பைத்தியமா நீ
அவளை அடித்தேன்
சாம்பலான பூக்களையே
பார்த்தபடி இருந்தாள்
நாட்கள் கடக்க
அவள் பூக்களை பறிப்பதை
அடியோடு நிறுத்திக்கொண்டாள்
அவள் இதழ்களும் சிரிப்பதை
நிறுத்திக்கொண்டன
பின்பொருநாள்
மீண்டும் அவளறையில்
கமழ்ந்த சாம்பல்
வாசம்
அறைய கதவைத் திறக்க
வெளிச்சத்தோடு அவள்
தன் அழுதுவடிந்த
கண்ணீரை
சூரியனில் எரித்துக் கொண்டிருந்தாள்
நான் பேச்சற்று
உறைந்து போனேன்
அவள் கருவளையமிட்ட
கண்கள் யாவும்
எரிந்த பூக்களையே
மீண்டும் மீண்டும்
ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தன...