செல்லம்
சார்...இப்ப எந்த சாதியிலேயும்
பெண் கிடைக்கிறது ரொம்பக்
கஷ்டம். நீங்க நினைக்கிற மாதிரி
இப்ப இல்லை..இந்த வரனை விட்டுறாதிங்க..
புரோக்கர் சுதர்சன் சொன்னது
சரிதான்.எவ்வளவு மன உளைச்சல்.
பெண் வீட்டிற்குள் நுழைந்தனர்
சுந்தரேசனும் மனைவி பத்மாவும்
தங்களுடைய ஒரே மகன் சாப்ட்வேர்
எஞ்சினியர் அபிலாஷுக்கு வரன்தேடி..
பார்மாலிட்டி முடிந்து பேச்சு
ஆரம்பித்தது. பெண்ணோட
அப்பாதான் பேசினார்...
நீங்க இவ்வளவுதூரம் கேட்கிறதுனாலே சொல்றேன் சார்..
எங்களுக்கு இருக்கிறது ஒரே
பொண்ணு....ரூபலா..
ரொம்ப செல்லமா வளர்ந்திட்டோம்.
அதனாலே...
அதனாலே..சுந்தரேசன் இடைமறித்தார். நீங்க என்ன
சொல்லவர்ரீங்னா...
பொண்ணு செல்லமா வளர்ந்ததினாலே அவளுக்கு
சமைக்கத் தெரியாது.. வீட்டு வேலை
ஏதும் பார்க்க மாட்டா...லேட்டா
எழுந்திருப்பா..எதையும் கேட்க மாட்டா அப்படித்தானே..
பெண்ணோட அப்பா ...ஆமாங்கறமாதி தலையசைத்து மாப்பிள்ளை அப்பாவை அதிசயமாய் பார்த்தார்.
சுந்தரேசன் தொடர்ந்தார்...
நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க..
என் பையன் புத்திசாலி..காலையிலே அஞ்சு
மணிக்கே எழுந்திருச்சிருவான்..
ஐ.டி கம்பெனில பெங்களூர்ல
இருக்கும்போது நல்லா சமைக்க
கத்துகிட்டான்..வீட்டு வேலை எல்லாம் அவனுக்குத் தெரியும். மேலும் அவன்
ரொம்ப பொறுமைசாலி...இதுக்கும்
மேல பையனோட அம்மா அதான்
என் மனைவி எல்லா வேலையும்
பார்ப்பாங்க..
சொல்லச் சொல்ல பெண்ணோட
அப்பா அம்மாவுக்கு சந்தோஷம்
தாங்கல...
அப்புறம் என்ன...அடுத்த மாதமே
கல்யாணத் தேதி குறிச்சிடலாம்..
சுந்தரேசனுக்கு புரோக்கர் சொன்னது காதில் ரீங்காரமிட்டது.
சரியென்று சுந்தரேசன்
தலையசைததார் ரோபாட் மாதிரி.
பத்மா எல்லாவற்றையும் பார்த்துக்
கொண்டிருந்தாள் அப்பிராணியாக.