153 தலைவற்குக் கால்கண்ணாம் தலைவி மிகு பேறுடையாள் - கணவன் மனைவியர் இயல்பு 45
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
ஏலுங் கால்கண் ணிலார்கொண்க ரென்னும்வேல்
போலுங் கண்ணி புனிதரைத் தாங்கிடக்
காலு நானிரு கண்களு நானெனின்
மேலு மெற்கினிப் பாக்கியம் வேண்டுமோ. 45
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”வேல்போலுங் கண்களையுடைய தோழியே! என் தலைவர் உலாவும் காலும் பார்க்கும் கண்ணும் இல்லாதவர் என்று சொல்லுகின்றாயே;
புனிதமான அவருக்கு நானே இரு கால்களும், இரு கண்களும் ஆவேன். இப்படியிருக்க, இவற்றுக்கு மேலும் எனக்கு இனி அடையவேண்டிய பேறு வேண்டுமா? தேவை இல்லை” என்று தோழியிடம் தலைவி கூறுவதாக இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
ஏலும் - உலாவும். பாக்கியம் - பேறு.