நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல் - பழமொழி நானூறு 290

இன்னிசை வெண்பா

அல்லவை செய்ப அலப்பின் அலவாக்கால்
செல்வ(து) அறிகலர் ஆகிச் சிதைத்தெழுப
கல்லாக் கயவர் இயல்போல் நரியிற்கூண்
நல்யாண்டும் தீயாண்டும் இல். 290

- பழமொழி நானூறு

பொருளுரை:

கீழ்மக்கள் வறுமையுற்ற இடத்து அது காரணமாகத் தீமையைச் செய்து உண்பார்கள்; செல்வம் உற்ற இடத்து செல்லும் நன்னெறியை அறியாதவர்களாகி அறத்தைக் கெடுத்து ஒழுகுவார்;

கல்லாத கீழ் மக்களுக்கு நன்மை என்பதில்லாதது போல, நரியினுக்கு உணவு பெறுகின்ற நல்ல காலமும், பெறாத பஞ்ச காலமும் இல்லை.

கருத்து:

கல்வி அறிவில்லாத கயவர்கள் எக்காலமும் தீமையையே புரிந்து ஒழுகுவார்கள்.

விளக்கம்:

கல்லாக் கயவர் இயல்போல் என்றாரேனும், நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல்லாத இயல்போலும் கல்லாக் கயவர் இயல் என்பது பொருளாகக் கொள்க.

நரிக்கு உணவுப் பஞ்சம் இல்லாதது போல, கயவருக்குத் தீமை செய்வதில் பஞ்சமில்லையாம்;. கயவர் நற்குணங்கள் ஒருசிறிதும் இல்லாதவர்.

'நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Mar-23, 12:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே