செல்வம் பெறுதலும் இன்னார் பழஞ்செய்போர் பின்று விடல் - பழமொழி நானூறு 292

இன்னிசை வெண்பா

வழங்கார் வலியிலார் வாய்ச்சொல்லும் பொல்லார்
உழந்தொருவர்க் குற்றால் உதவலும் இல்லார்
இழந்ததில் செல்வம் பெறுதலும் இன்னார்
பழஞ்செய்போர் பின்று விடல். 292

- பழமொழி நானூறு

பொருளுரை:

உணவிற்கு ஒன்றும் இன்மையால் பசியால் வருந்தி இரந்தார்க்கு வேண்டிய உணவினைக் கொடாதவராகவும், கொடுக்கும் ஆற்றல் இலராதலின் சொல்லும் சொற்களாலும் தீயவர்களாகவும், வருந்தியாகிலும் ஒருவர்க்கு ஓரிடர் வந்த பொழுது உதவிசெய்யாதவராகவும் உள்ள இத்தன்மையர், கெடுதலில்லாத செல்வத்தைப் பெற்றிருத்தல்,

நெடுநாட்களாக எரு முதலிய உரம் பெற்றுவந்த வயல் உரம் பெறாத இப்பொழுது போர் இடுமாறு கதிர்கள் விடுதலை யொக்கும்.

கருத்து:

ஈதல், இனிய கூறுதல், உதவி செய்தல் முதலியன இல்லாதவர்கள் செல்வம் பெற்றிருத்தல், முன்செய்த நல்வினையாலே யாம்.

விளக்கம்:

கொடுக்கும் ஆற்றல் இல்லாதவர்களாதலின் அதற்கேற்றவாறு சொற்களும் கடியவாயின. இரந்தார்க்கு வழங்கலும், இனிய கூறுதலும், உற்றுழி யொன்று உதவலும் ஒருவன் செல்வம் பெறுதற்குரிய காரணங்களாம்.

’பழஞ்செய்போர் பின்று விடல்’ என்பது பழமொழி!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Mar-23, 6:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே