தயரதன் கைகேயியின் மனைக்குப் போதல் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கூவிளம் கூவிளம் கூவிளங்காய் தேமா)

நாழிகை கங்குலின் நள்ளடைந்த பின்றை,
யாழிசை அஞ்சிய அம்சொலேழை கோயில்,
வாழிய என்றயில் மன்ன(ர்)துன்ன, வந்தான்
ஆழி,நெ டுங்கைம டங்களாளி அன்னான்! 5

- கைகேயி சூழ்வினைப் படலம், அயோத்தியா காண்டம்

பொருளுரை:

ஆணைச்சக்கரம் ஏந்தும் நீண்ட கைகளையுடைய சிங்க ஏறு போன்றவனான தயரதன் இராப்பொழுது நடுவையடைந்த பின்னர் ‘வாழ்க’என்று கூறிக்கொண்டு வேலேந்திய அரசர்கள் பக்கத்தில் சூழ்ந்துவர யாழினது ஒலியும் அஞ்சப்பெற்ற அழகிய மொழியையுடைய கைகேயியின் மாளிகைக்கு வந்தடைந்தான்.

மறுநாள் இராமனுக்கு முடிசூட்டுவதற்குரிய விழா ஏற்பாடுகளைச் செய்வதில் காலம் கழிந்தமையால் இரவில் காலந் தாழ்த்துக் கைகேயியின் இருப்பிடம் நோக்கி மகிழ்ச்சியோடு தயரதன் சென்றான்.

ஏழை - பெண்; பிறர் பேச்சைக் கேட்டு ஆராயாது நடத்தலின் அறிவில்லாதவள் என்னும் குறிப்பும் புலப்பட வைத்தார்; மடங்கல் - பிடரிமயிர் மடங்கியிருக்கப் பெற்றது!.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Mar-23, 9:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே