வடிந்தற வல்லதற்கு இல்லை வருத்தம் - பழமொழி நானூறு 319

நேரிசை வெண்பா

முடிந்ததற் கில்லை முயற்சி முடியா(து)
ஒடிந்ததற்(கு) இல்லை பெருக்கம் - வடிந்தற
வல்லதற்(கு) இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்(கு) இல்லை பெயர். 319

- பழமொழி நானூறு

பொருளுரை:

முடிந்த செயலுக்கு முயற்சி செய்ய வேண்டுவதில்லை, முடிவுறாது இடையே முறிந்த செயலுக்கு ஆக்கமில்லை;

அவைபோல, உலகில் இல்லாத பொருள்களுக்குப் பெயர்கள் இல்லையாதலால்,.குற்றமறச் செய்யவல்லதற்குச் செய்யும் பொழுது துன்பம் ஏற்படுதல் இல்லை,

கருத்து:

தம்மால் முடியுஞ் செயலை யாவருஞ் செய்க. அதனால் துன்பம் உண்டாகாது.

விளக்கம்:

முடியாத செயலை மேற்கொண்டாலன்றித் துன்பம் உண்டாகாது; வருத்தம் வருமென்று நினையாது முடியும் காரியத்தில் முயற்சி செய்க என்பது;

'வடிந்தற வல்லதற்கில்லை வருத்தம்' என்பது கருத்தாகலான் முன்னிரண்டும், உவமைகளாகவும் பின்னது ஆதாரமாகவும் கொள்ளப்பட்டன.

உலகில் இல்லாத பொருள்களுக்குப் பெயரில்லையாதலால், முடியும்காரியத்திற்கு வருத்தம் இல்லை என்பதாம்.

'இல்லதற்கு இல்லை பெயர்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Apr-23, 3:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே