யாவரும் நலம்
ஆதியில் தோன்றிய அகிலமும் எங்கே?
பாதியில் மாறிய பருவமும் இங்கே
பாவம் சுழலும் கலியுகம் இங்கே
காத்திடும் கடவுளும் தரணியில் எங்கே?
ஆட்சிபுரிகின்ற அரசன் இங்கு உண்டு
அரியணை அமர்ந்திட ஆடவர் உண்டு
ஏனோ நாடிய அமரன் இங்கில்லை
நீதியும் உண்மையும் போனது எங்கே...?
அன்னையாய்ப் போற்றிய பெண்மகள் இங்கே
பதுமையாய் வாழ்ந்திடும் பேரிளம் பிள்ளை
கனவுகளோடு ஆடிய செல்வம்
கள்வர்களால் நேர்ந்த கொடுமைகள் ஏனோ?
சொல்ல வியலா கொடூரம் இதனை
கேட்பா ரின்றிப் புதைந்தது மண்ணில்
விண்ணில் நிகழ்த்திய சாதனை உண்டு
வீரனில்லாதொரு சோதனையும் உண்டு
தட்டிக் கேட்டிடச் சட்டம் இங்கில்லை
தட்டிக் கொடுத்திடும் கூட்டமும் இங்கே
பாற்கடல் அதிரும் பராக்கிரமம் இதனை
பார்த்து அழுதிடும் பாரத மாதா...
பசியாற உணவிட்ட பரமன் அவன்
ஒருபடி உணவின்றி இறக்கின்ற அவலம்
ஓரமாய் நின்று பார்க்கின்ற நாமே
பாரமாய் வாழும் வேடிக்கை மனிதர்...
போலி இல்லாத புன்னகை இல்லை
பொலிவு இல்லாது தவிக்குது வையம்
மரணம் இல்லாத ஜனனமும் இல்லை
கறைப் படியாத காவியும் இல்லை...
மானுடம் அழிந்த மகாத்மா மண்ணில்
மகளிர் குலமிங்கு அழிவது ஏனோ?
உணவின்றி தவிக்கும் அவலம் ஏனோ?
விடையென எழுந்தன காசும் பணமும்...
மதத்தால் வெடிக்கின்ற போரினை கண்டு
வீதியில் இறங்கிட கலங்குது உள்ளம்
சாதியால் சாகும் சக்கர வியூகம்
எனினும் தரணியில் யாவரும் நலம்...