தள்ளியுந் தாங்கருங் கேள்வி யவர் -ஆசாரக் கோவை 50
இன்னிசை வெண்பா
பழியார் இழியார் பலருள் ளுறங்கார்
இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி
இல்லாரை யெள்ளி இகழ்ந்துரையார் தள்ளியுந்
தாங்கருங் கேள்வி யவர்! 50
- ஆசாரக் கோவை
பொருளுரை:
பெறுவதற்கு அரிய கல்வி கேள்விகளில் சிறந்தவர் தவறியும் பலர் நடுவில் இருந்து படுத்துத் தூங்க மாட்டார்,
ஒருவரைத் தூற்றிப் பழி சொல்லமாட்டார், இகழ்ந்து பேசமாட்டார்,
தமக்குப் பொருந்தாத செயல்களைச் செய்கிறேன் என்று ஒப்புக்கொண்டு பின்னர் அதைச் செய்யாது விடமாட்டார்.
வறியவரை முறையின்றி ஏளனம் செய்து இழிவாகப் பேசமாட்டார்.

