இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம் - பாண்டியன் – முத்தொள்ளாயிரம் 72

நேரிசை வெண்பா
(வல்லின மெய் ப், ற் எதுகை)

இப்பியீன்(று) இட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே யல்ல படுவது - கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம்
கருதியார் கண்ணும் படும். 72

- முத்தொள்ளாயிரம்

பொருளுரை:

சிப்பி ஈன்று அளித்த ஒளி வீசும் முத்துக்கள் துறைமுகப் பட்டினமாகிய கொற்கையின் கடற்கரையில் மட்டும் கிடைக்கக் கூடியது அல்ல;

கொற்கைத் தலைவனாகிய இரத்தம் படிந்த வேலையுடைய பாண்டியனது குளிர்ந்த சந்தனம் பூசப்பட்ட மார்பினை அணையக் கருதிய தலைவியர் கண்களிலும் இயலாமையால் கண்ணிர் முத்துக்கள் தோன்றும்.

இப்பி – சிப்பி, ஈன்று இட்ட – ஈன்றளித்த, எறிகதிர் நித்திலம் – ஒளி வீசும் முத்து,

படுவது – அகப்படுவது; கிடைக்கக் கூடியது, குருதிவேல் – பகைவரது இரத்தம் படிந்த வேல்,

குளிர் சாந்து – குளிர்ந்த சந்தனம், அகலம் – மார்பு

அகலங் கருதியார்’ என்னுந் தொடர் வாயிலாக பாண்டியனுடைய அழகிய மார்பைத் தழுவ பல அழகியர் விரும்பினர் எனவும், அவ்வாறு தழுவ வாய்ப்பில்லாத ஏமாற்ற உணர்வால் கண்ணீர் மல்க ஏங்கினவர் கண்களில் பெருகிய கண்ணீர்த் திவலைகளும் முத்துக்களைப் போலக் காட்சியளித்தன எனப்படுகிறது.

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (8-Dec-25, 7:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே