தோளுயர்த்தத் தயாரா.? பொள்ளாச்சி அபி
இதுவரை நீ எழுதியதில்லை
எதற்காகவும் அசைந்ததில்லை.
அனுபவமுனக்கு வாய்க்கவில்லை
அதனால் நீ மனிதனில்லையா.?
அடுத்த தெருவில் பிடித்த தீ
அணைக்காமல் விட்டால் அது
தொடர்ந்து அண்டும் உன்வீட்டை
அதையும்நீ கேட்டதில்லையா.?
எட்டு மணிநேர வேலைக்காக சிக்காகோவில்
யாரோ சிலபேர் இரத்தம்சிந்திப் போராட
அதன்பயனை உரிமையென்று நீ
அனுபவிக்கவில்லையா..?
எத்தனையெத்தனை போராட்டம்
எங்கெங்கோ நடைபெற்றதில்
உலகம் தழுவிய உரிமைகளாய்
உன்வரை அதுவந்து சேரவில்லையா.?
ஆனால் தமிழா நீயும்தான் போராடி
எதையாவது எந்தநாட்டுக்காவது
பெற்றுத் தந்தேன் என்றே நீயும்
தோளுயர்த்தத் தயாரா.?
உனக்கொரு நல்ல சந்தர்ப்பம்
மடியில் வந்து வீழ்ந்தது பார்..
மனிதம்கொன்று,மனிதரைத் தின்ற
மரணவியாபாரி ராஜபக்ஷே..
மன்னிக்க முடியாத குற்றவாளியென
நீயும் இன்றே தீர்ப்பு எழுது..!
அதை மத்தியஅரசுக்கு அனுப்பிவிடு..
அது மகத்தான போராட்டம் கையிலெடு..!
-அன்புள்ள தோழர்களே..! வீதிக்கு சென்று போராட உங்களுக்கு நேரமில்லாமல் இருக்கலாம்.
எல்லோர் முன்பும் கையுயர்த்த உங்களுக்கு வெட்கமாகக்கூட இருக்கலாம்.இதற்காக செலவழிக்க உங்களிடம் பணம் இல்லாமலிருக்கலாம்..இப்படி எதுவேண்டுமானாலும் இல்லாமல் போகட்டும்.
ஆனால்.இங்கு தொடர்பிலிருப்பவர்கள் எல்லாரும் எழுதும் திறமையை வைத்திருக்கிறீர்கள்.
இன்னும் ஆங்கிலப்புலமை பெற்றவராகவும் இருக்கிறீர்கள்..அதை நீங்கள் இல்லையென்று சொல்லிவிடமுடியாது.
இந்த நேரத்தில எனது வேண்டுகோள்..உலகப் பெரியண்ணன் என்றும்,மிகப்பெரும் போலீஸ் எனறும்,உலக அளவில் மிகப்பெரிய ரவுடியென்றும்,பெயர்பெற்ற அமெரிக்காவே இன்று இலங்கை அரசின் ராஜபக்ஷே போர்க்குற்றவாளி என்று ஐநா அவையில் தீர்மானம் கொண்டுவருகிறது.அதனை இந்தியா ஆதரிக்கவேண்டும் என,தெருவில் இறங்கி பல்வேறு இயக்கங்கள் போராடி வருகின்றன.
ஈழத்தில் என்னவெல்லாம் நடந்ததென்று உங்களுக்கும் தெரியும்.அந்த ரத்த சொந்தங்களுக்கு,நமது மூதாதையரின் வழித்தோன்றல்களுக்கு இன்னும் எத்தனையோ நல்லது நடக்கவேண்டியதிருக்கிறது.
அதற்காக நாம் இந்த தீர்மானத்தை ஆதரிக்கவேண்டியதிருக்கிறது.
அதனால்தான் தோழர்களே..குடியரசுத்தலைவர்,பிரதமர்,இன்னும் மத்தியஅரசின் அதிகாரப்பூர்வ இமெயில்களுக்கு,நீ;ங்கள் உங்கள் கோரிக்கையாக-ஐநாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும்-என ஒற்றைவரி..ஒரே வரி…எழுதுங்கள்.இதன் மூலம் நீங்களும் தங்கள் சொந்த நாட்டின் அடையாளத்தை இழக்கப்போகும் அச்சத்திலிருக்கும் நமது சொந்தங்களுக்கான போராட்டத்தில் பங்கேற்றவர்களாகி விடுவீர்கள்.அவர்களுக்கு எதிர்காலத்தில் அமையப்;போகும் நல்வாழ்வில் உங்கள் பங்கும் இருக்கிறது என்பது மிகப்பெருமையான விஷயம் அல்லவா..?.வாருங்கள் தோழர்களே..!-
மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் ஈ.மெயில் முகவரி.
Prime Minister Govt of India pmosb@pmo.nic.in
manmohan@sansad.nic.in
அன்புடன்
பொள்ளாச்சி அபி-
முந்தைய பதிவினை படிக்காமல் தவற விட்டவர்களுக்காக மறுபதிப்பாக இதை பதிகிறேன் தோழர்களே.! வேறு எதுவும் தவறாக நினைக்க வேண்டாம்.