நான் உன் தோழன்
--- நான் உன் தோழன் ----
உலகில் உள்ளோரெல்லாம்
உன் உடன் பிறப்பா?
ஏகாதிபத்தியம் என்றால்
உனக்கு அருவருப்பா?
அக்கிரமம் நிகழும் போதெல்லாம்
உக்கிரம் அடைந்தாயா?
பழங்குடி சமுதாயத்தின் நிலை கண்டு
பலத்த பகுத்தறிவு உண்டாகியதா?
சாதனை பல செய்தாலும் நானொரு
சாதாரண மனிதன் என்றே நினைத்தாயா?
எமதர்மன் வீட்டிற்குள் நுழைந்து
சமதர்மம் பேசி வந்தாயா?
முகம் தெரியாத போராளிக்காக
மூச்சு உடையும்வரை முழங்குவாயா?
உன் உயிர் போகும் என்று தெரிந்தும்
பின்வாங்க மறுத்தாயா?
அடித்தட்டு மக்கள் நலனிற்காக
அடிபட்டுச் சாக தயாராக இருந்தாயா?
அப்படியென்றால்
நானும் நீயும்
நைல்நதி நாகரீகம்
நடக்கும் காலமிருந்தே
நண்பர்கள்.
-- தமிழ்தாசன் --