ஒரு கவிதையின் பயணம்

கவிதை ஓன்று எழுதினேன்
புனைபெயர் சூடி
கவிஞர்கள் வரிசையில்
சேர்ந்துகொண்டேன்

எழுதிய கவிதையை
என்ன செய்ய?
போட்டிக்கு அனுப்பலாமா?
பத்திரிகையில் வெளியிடலாமா?
விருது கிடைக்குமா?

நாலுபேரிடம் காண்பிப்போமென்று
என் தமிழாசிரியரிடம் எடுத்துச்சென்றேன்
எதுகை மோனை எதுவுமில்லை
என்னையா கவிதை? என்றார்.
எடுத்தேன் ஓட்டம.

பக்கத்துவீட்டு எழுத்தாளரிடம்
படிக்ககொடுத்தேன்
ஆகா...ஓகோ....அருமை...
ஆனால்ஆங்கிலத்தில் இதை
படித்ததாக ஞாபகம் என்றார்
(போலி கவிஞரென்று
புகார் கொடுப்பாரோ?)

வீட்டுக்கு வந்துவிட்டேன்
கைபேசியில் வாய்பேசினேன்
நண்பரோ "சிக்னல் வீக்" என்று
துண்டித்துவிட்டார் (நட்பையும் சேர்த்துதான்)
மகனைப்பார்த்தேன்
படிப்பதுபோல் பாவித்தான்
மனைவியை தேடினேன்
அடுப்படியில் அடைந்துகொண்டாள்
கணணியை முடுக்கி
தளங்களை தேடினேன்
எல்லா தளங்களிலும்
ஏகப்பட்ட விதிகள்
அகப்பட்டது எழுத்து தளம்
எழுதிவிட்டேன் என் கவிதையை
நானும் கவிஞனாகிவிட்டேன்.
(கிரீடமில்லை என்றாலும்
கர்வம் குறையவில்லை)
கருத்து நண்பர்களே!
பிழையிருந்தால் மன்னிப்பீர்களாக!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (14-Apr-12, 12:12 pm)
பார்வை : 394

மேலே