ஓட்டளியுங்கள் உங்கள் வணங்காமுடிக்கே!.......
[ மெரினா பீட்சீல் ஒரு கட்சி அரசியல் பிரச்சாரம்.]
வாக்களியுங்கள் எங்கள் வர்ணக்கொடிக்கே!
ஓட்டளியுங்கள் உங்கள் வணங்காமுடிக்கே!
"அளித்தால்?" கூட்டமதில் தனியொருவன் குரல் கேட்க,
அத்தனையும் தருவோம் இலவசமாய்,
இத்தனையா என்பாய் பரவசமாய்!
"அப்படி என்ன கொடுபீரோ? " - சந்தடியில்
வந்த மகள் வாய்த்தொடுத்தாள்.
என்னடியம்மா இப்படி கேட்டாய்?
என்னதான் இல்லை என்றெண்ண,
அத்தனையும் தருவோம் வேறென்ன?
" இத்தனை இருந்தும் பயனென்ன?
மின்சாரம் உண்டா, பதில் என்ன? "
தலைமறைவில் குரல்கொடுத்தான் சுண்டல்காரன்.
" ஆளுங்கட்சி வீழ்ந்தவுடன் நாங்கள் வந்தால்
ஒன்றிரண்டு மாதத்தில் தடையில்லா மின்சாரம் உண்டு."
" ஓட்டுக்கொரு குவார்ட்டர் கொடுப்பாயா? "
அக்கறையாய் கேட்டான் ஒரு குடிமகன்.
நாங்கள் மட்டும் ஆட்சியை பிடித்துவிட்டால்
ரேசன் கடையில் மாதமொன்றில்
கொடுத்திடுவோம் குவார்டர் பத்து.
இலவசங்கள் இத்தனையா வாய்பிளந்து
வாக்களித்தோம், வாக்கிழந்தோம் வேறென்ன கண்டுவிட்டோம்.
கொடுத்தது ஒரு கோடியென்றால் அடித்தது பல்லாயிரம்கோடி.
இனியேனும் விழித்திடுவோமா?