இரங்கற்பா

வாழ்த்துப்பாவெழுதி இல்
வாழ்க்கையில் தள்ளிவிட
நினைத்திருந்தேன் நீயோ
இரங்கற்பா எழுத வைத்து விட்டு
இன்னலில் எங்களை
தள்ளி விட்டுப் போனதும் ஏனோ....?

அதிராத பேச்சினால்
அத்தனை உள்ளங்களிலும் நிறைந்தவனே
அதிர்ந்து தான் போனோம்-அன்று
விபத்து வந்து விளையாட்டாய்
உயிரைக் கேட்க-நீயும்
விளையாட்டாய் உயிரை கொடுத்தாய்
என்ற போது......

இடியை இதயத்தின்
இரு பக்கத்திலும்
இறக்கி வைத்து விட்டு-நீ
நொடிப் பொழுதில் சென்று விட்டாய்
நெடிய வேதணை
நெஞ்சை வாட்டுகிறது

இத்தனை நாளும்
பூகம்பம் தான் உலகில்
பேரதிர்ச்சி என்றிருந்தேன்

உன் மரணச் செய்தி
செவியை தாக்கிய போது
இதயம் அதிர்ந்ததை
அளவிட்டு இருந்தால்
பூகம்பம் "பூ"
உதிந்ததைப் போல் இருந்திருக்கும்


அடை மழை மேகம்
பார்த்திருக்கிறேன்
ஊரையே அடைத்த சோகம்
அன்று தான் பார்த்தேன்

அழத் தெரியாதவன் கூட
அழுததும் அன்று தான்
அதில் நானும் ஒன்று தான்


மரணித்த பின்
உறவுகள் அழுவது
வாழ்ந்து மறைந்ததற்காக;
ஊரே அழுவது
மறைந்தும் வாழ்வதற்காக;

அப்போது ஊரின் கண்ணீரே
சாட்சி சொன்னது-நீ
நல்ல மனிதன் என்று.!


தம்பி (ரிழ்வான்) உன் உடலுக்கு
மரணம் வந்தது உண்மை
உன் பெயருக்கு என்றுமே மரணமில்லை
எங்கள் நினைவிருக்கும் வரை
நீங்காமல் நீயும் நிலைத்திருப்பாய்
உன்னை மறக்கும் போது
நாங்கள் மரணித்திருப்போம்.

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (12-Jul-12, 8:49 am)
பார்வை : 2074

மேலே