நினைவாற்றல் மேம்பட வழி ! நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நினைவாற்றல் மேம்பட வழி !

நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வெளியீடு ; தன்னம்பிக்கை ,79. திவான் பகதூர் சாலை ,ஆர்.எஸ் .புரம் ,கோவை.641002. விலை ரூபாய் 20 . info@thannambikkai.net

நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் அவர்கள் பன்முக ஆற்றலாளர் .அவருடைய நூல்கள் பல படித்து உள்ளேன் .மதுரையில் அவர் உரை கேட்டு இருக்கிறேன் .பழகுவதற்கு இனிமையானவர் .இவர் கோபப்பட்டு யாருமே பார்த்து இருக்க முடியாது .
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகப் பேராசிரியர் ,நாடறிந்த அறிவியல் தமிழ் எழுத்தாளர் ,கவிஞர் ,ஆற்றல் மிக்க பேச்சாளர் ,தொண்டறம் புரியும் கால்நடை மருத்துவர் .அவர் எழுதிய நினைவாற்றல் மேம்பட வழி ! அய்ந்து பதிப்புகளைக் கடந்து வந்து வந்து விட்டது .தன்னம்பிக்கை பதிப்பாக வருகின்றது .தன்னம்பிக்கை மாத இதழின் வாசகர் நான் .மதுரை தன்னம்பிக்கை வாசகர் வடத்தின் செயலராக இருந்து மாதம்தோறும் பயிலரங்கம் நடத்தி வருகின்றோம் .தன்னம்பிக்கை நூலில் விலை என்பதற்குப் பதிலாக மூலதனம் என்று இருக்கும் .இந்த நூலும் மூலதனம்தான் .மிகச் சிறந்த நூல் இது .இந்த நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது .படித்து முடித்தவுடன் நூல் ஆசிரியர் டாக்டர்
பெரு .மதியழகன் அவர்களை உடன் செல்லிடப்பேசியில் அழைத்துப் பாராட்டினேன் . அவர் சொன்னார் இந்த நூல் இருபது வருடங்களுக்கு முன்பு எழுதியது என்று .ஆனால் இந்த நூல் இன்று எழுதியது போல இருந்தது .இன்றைக்கும் மட்டுமல்ல என்றைக்கும் பொருந்தும் விதமாக இருந்தது .
எனக்கு ஞாபக மறதி உள்ளது .நினைவாற்றல் எனக்கு இல்லை என்று சொல்லும் அனைவரும் படிக்க வேண்டிய பயனுள்ள நூல் .குறிப்பாக மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல் .
நூல் ஆசிரியர் டாக்டர் பெரு .மதியழகன் அவர்கள் நினைவாற்றல்
பற்றி ஆய்வு செய்து எழுதிய நூல் இது . நூலில் மாணவர்கள் படிக்க தொடங்கும் முன் மனதை சம நிலைக்குக் கொண்டு வரும் பயிற்சி நூலில் உள்ளது .நூலிலிருந்து சில துளிகள் உங்கள் பார்வைக்கு .
" இந்த அறிவு யுகத்தில் ஒருவரின் ஒப்பரிய செல்வமே நினைவாற்றல்தான் .போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் எதைச் சாதிப்பதற்கும் நினைவாற்றல் வேண்டும் .நமது அறிவின் அளவுகோல் நினைவாற்றலே."

நினைவாற்றலின் முக்கியத்துவம் உணர்த்துகின்றது நூல் .
நினைவாற்றல் காரணமாகத்தான் பலர் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுக்க முடிகின்றது. நேர்முகத்தேர்வில் வெறி பெற முடிகின்றது .பேச்சாளர் திறம்படப் பேசி கைதட்டல் வாங்கக் காரணம் நினைவாற்றல்.ஆகவே எல்லா வெற்றிக்கும் ,சாதனைக்கும் துணை நிற்பது நினைவாற்றல்.அதனை வளர்த்துக் கொள்ள வழி சொல்லும் நூல் இது .

நினைவாற்றலுக்கு அடிப்படைகள் கற்றல் ,நினைவிலிருத்தல்,மீட்டழைத்தல் ,மீட்டறிதல் பற்றிய விளக்கங்கள் மிக நன்று .இவற்றை கடைப்பிடித்தால் நினைவாற்றல் மேம்படுவது உறுதி என்று அறுதி இட்டுக் கூறலாம் .

நினைவாற்றல் மேம்பட கவனம் அவசியம் .எதையும் நாம் உற்று நோக்கினால் மனதில் பதியும் . நினைவாற்றல் மேம்பட எளிமையான மனப்பயிற்சி நூலில் உள்ளது .நினைவாற்றலும் உடலோம்பலும் என்ற தலைப்பில் உணவுப் பழக்கம் பற்றி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார் .மூச்சுப்பயிற்சி பற்றி விரிவாக எழுதி உள்ளார் .உறக்கம் பற்றி சுகாதாரம் பற்றி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்.தேர்வு பயம் போக்குவது எப்படி ? பயிற்சியும் ,முயற்சியும் நூலில் உள்ளது .

முத்தாய்ப்பாக நூலில் உள்ள உத்வேகம் தரும் ஒரு கவிதை இதோ !
முடியும் நம்மால் முடியும்
முயன்று பார்த்தல் முடியும்

நொடியும் சிற்சில நொடியும்
நொடிந்து சோர்ந்திடாமல்

கடினமாய் உழைத்தால் வெற்றி
கையில் வந்து படியும்

மடியும் இன்னல் மடியும்
மறுநொடி யினிலே மடியும் !

வெற்றிக்கான வழி சொல்லும் நூல் இது .எந்த ஒரு செயலையும் விரும்பி செய்யும் போது பலன் உறுதி. படித்தல் ,கேட்டல்,பேசுதல் ,உண்ணுதல் உறங்குதல் எப்படி எந்த ஒரு செயல் செய்யும் போதும் கஷ்டப்பட்டு செய்யாமல் இஸ்டப் பட்டு செய்தால் வெற்றி உறுதி என்பதை உணர்த்திடும் உன்னத நூல் இது .நல்ல நூல் படித்தால் என்ன பயன் என்பதை உணர்த்தும் நூல் . நூல் ஆசிரியர் டாக்டர்
பெரு .மதியழகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

எழுதியவர் : இரா .இரவி (7-Aug-12, 6:38 pm)
பார்வை : 393

மேலே