புரியாத உலகம்

வாழ்ந்திடும் வாழ்வோ நிலையில்லை
வாழ்வோர் இதனை உணர்வதில்லை
ஏய்த்திடும் எத்தர்க்கு அளவேயில்லை
ஏங்கிடும் ஆசைக்கு அணையுமில்லை !

பகைமை உணர்வுகள் மறையவில்லை
பழமை மரபுகள்தெரியவில்லை
வாய்மை வாழ்ந்திட வாய்ப்பில்லை
பொய்மை பொய்த்திட வழியுமில்லை !

உதவிடும் உயிர்கள் உயர்வதில்லை
உதறிடும் உள்ளங்கள் குறையவில்லை
பாசமெனும் பூக்கள் மலர்வதில்லை
பரிவெனும் வாசம் அறவேயில்லை !

வறுமைஎனும் புயல் ஒய்வதில்லை
வளமைஎனும் தென்றல் வீசவுமில்லை
உறங்கிடும் உண்மைகள் எழுவதில்லை
உத்தமர் உரைக்கு மதிப்புமில்லை !

என்றுதான் மாறிடுமோ இந்தநிலை
அன்றுதான் அவனியில் இன்பநிலை
மனங்கள் நினைத்தால் செய்திடலாம்
மண்ணில் மாற்றங்கள் நிகழ்ந்திடலாம் !


இதயத்தால் இணைந்து மாற்றிடுவோம்
இல்லங்களில் இன்ப ஒளி ஏற்றிடுவோம் !

எழுதியவர் : பழனி குமார் (8-Aug-12, 7:55 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 195

மேலே