ஆய கலைகள்

விந்தி விரையும் அணுக்களில்
முந்தியதோ முட்டியதோ உயிர்ப்பது போல்
காட்சியிலோ கேள்வியிலோ
நுரையீரல் தொட்டுச் சுரப்பியைத் தூண்டும்
நாற்றங்களில் ஒன்றோ
ஸ்பரிசமோ காயமோ
மூளைக்குள் புதைந்திருக்கும் எதுவோ ஒன்றைப்
புணர்ந்து உயிர்த்து
முத்தங்கள் வைக்கையில்
மூடிக்கொள்ளும் கண்களைப் போல்
மூடிவிடும் மற்றனைத்தையும்.

நொறுக்கும் வலியுடன் கருப்பை திறந்தோ
அறுவையை ஏற்றோ
ஜனித்துவிடும் உயிரினைப் போல்
பிறந்தே விடுகிறது
அவ்வாறு உயிர்த்த அப்‘படைப்பு’ !!

எழுதியவர் : சுபத்ரா (8-Aug-12, 9:44 pm)
சேர்த்தது : சுபத்ரா
பார்வை : 286

மேலே