இன்பதீபம் ஏற்றிடுவோம்

சுழன்றிடும் பூமியும் நிற்பதில்லை
சுயநல மனிதரும் மாறுவதில்லை
நித்தம் பிறப்போ குறைவதில்லை
நிச்சயம் வாழ்க்கை நிலையில்லை
இருப்போர் இதனை உணர்வதில்லை
இதுதான் உலகின் உண்மைநிலை !

உள்ளவரை உறவுகள் இணைவதில்லை
உண்மை உள்ளங்கள் பிரிவதில்லை
வாய்மை வாழ்ந்திட வாய்ப்புமில்லை
பொய்மை பொய்த்திடும் நிகழ்வுமில்லை
உதவிடும் உயிர்கள் உயர்வதில்லை
உதறிடும் உள்ளங்கள் தாழ்வதுமில்லை !

இரும்பு இதயங்கள் இளகுவதில்லை
கறைபட்ட நெஞ்சங்கள் நீங்குவதில்லை
நட்பெனும் பயிர்கள் வளர்வதில்லை
பகைமை உணர்வுகள் களைவதில்லை
பாசமெனும் பூக்கள் மலர்வதில்லை
பரிவெனும் வாசம் அறவேயில்லை !

வறுமை எனும்புயல் ஓய்வதில்லை
வளமை எனும்தென்றல் வீசுவதில்லை
உறங்கிடும் உண்மைகள் எழுவதில்லை
உத்தமர் நெடுநாள் வாழ்வதில்லை
ஏய்த்திடும் எத்தர்கள் மாய்வதில்லை
ஏங்கிடும் ஆசைக்கு அளவேயில்லை !

என்றுதான் மாறிடுமோ இந்தநிலை
அன்றுதான் அவனியில் இன்பஅலை
மனங்கள் நினைத்தால் செய்திடலாம்
மண்ணில் மாற்றங்கள் நிகழ்ந்திடலாம்
இதயங்கள் இணைந்து மாற்றிடுவோம்
இல்லங்களில் இன்பதீபம் ஏற்றிடுவோம் !

எழுதியவர் : பழனிகுமார் (12-Aug-12, 2:32 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 118

மேலே