சிவப்பு சேலைக்குள் அவள்

மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருந்த அந்த எழு வயது குழந்தையை உற்று நோக்கினாள் திவ்யா.எதற்காக இந்த சின்ன பொண்ணு இப்படி தலை தெறிக்க ஓடுகின்றது என்று அவளுக்கு தெரியவில்லை.
எதிரில் வரும் வாகனங்கள்,மனிதர்கள், பரபரப்பு எதையும் பாராமல் அவ்வளவு என்ன அவசரம் இந்த சின்ன வயதில், இவளது பெற்றோர் எங்கே? போகும் இடத்தில் இந்த சின்ன பொண்ணு காணமல் போனாலோ, இல்லை ஏதும் விபத்தில் சிக்கி கொண்டாலோ என்னாவது என்று திவ்யாவின் மனம் துடித்துக் கொண்டது. வேகமாக அந்த குழந்தையை பின் தொடர்ந்து சென்றாள் அவள். அடுத்த திருப்பத்தில் ஒரு பெரிய கூட்டம் காணப்பட்டது. ஆண்களும் பெண்களும் எதற்காகவோ முண்டியடித்து கொண்டு இருந்தது அவளின் கண்களில் தெரிந்தது. அந்த ஜன நெருக்கடியில் அவளின் கண்களில் இருந்து அந்த சின்ன பொண்ணு தப்பி விட்டிருந்தாள். என்னடா இது?என்று அவளின் மனம் சலித்து கொண்டு இருந்தது.

அந்த இடத்தை விட்டு நகராமல் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள் திவ்யா.போன பொண்ணு இந்த வழியால் தான் திரும்பி வர வேண்டும்,வரும் போது அவளுடன் பேச வேண்டும், இப்படி தனியாக ஒரு நாளும் வரக்கூராது என்று சொல்ல வேண்டும் என்று எண்ணி கொண்டாள் அவள். அந்த சின்ன பொண்ணை கண்டு பிடிக்காமல் அவளால் நின்மதியாக வீடு போய் சேர முடியாது என்பது திண்ணம்.

நேரம் நகர்ந்தோட அந்த கூட்டமும் மெல்ல மெல்ல கரைந்துகொண்டிருந்தது. திரும்பி சென்றுகொண்டு இருந்த ஒருவரை மறித்து "என்ன இவ்வளவு கூட்டம்?" என்றாள் திவ்யா."என்னம்மா பொண்ணு நீ?, விஷயம் தெரியாத உனக்கு ?எமது ஆளும் அமைச்சர் ஒருவர் தனது பிறந்த நாளான இன்று தனது பிறந்த இடத்தில் உள்ள மக்களுக்கு சேலையும் வேட்டியும் ஒரு வேளை உணவு பொதியும் கொடுக்கின்றார், அதுதான் நானும் ஒருவாறு முண்டியடித்து கொண்டு ஒரு வேட்டி வாங்கி விட்டேன், ஆனால் என் கவலை எல்லாம் ,என் பொண்ணுக்கு ஒரு சேலை வாங்க முடியவில்லை.என்பது தான் , புது சேலை வர போகின்றது என்று கடந்த ஒரு வாரமாக வானத்துக்கும் பூமிக்கும் இடையில் குதித்து கொண்டு இருந்தாள் அவள் . அவளுக்கு தான் என்ன பதில் சொல்வது என்று புரியலை" என்றார் அவர். அவரின் குரலில் நிச்சயமாக சொல்ல முடியாத ஒரு சோகம் இழை ஓடிக்கொண்டு இருந்ததை உணர்ந்து கொண்டாள் திவ்யா .சரிம்மா , என் குழந்தைகள் பசியோடு இந்த உணவுக்காக காத்து கொண்டு இருப்பார்கள் நான் போய் வருகின்றேன் என்று விடை பெற்றார் அந்த பெரியவர்.

எல்லோரும் கலைந்து சென்ற பின்னரும் அந்த சின்ன பொண்ணை அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த இடமே வெற்று சாப்பாட்டு பொதிகளாலும் வெற்று தாள்களாலும், வாழை இலைகளாலும் வெற்றுதண்ணீர் போத்தல்களாலும் நிரம்பி இருந்தது. இடையிடையே ஒன்று இரண்டு சேலை துண்டுகளும், வேட்டி துண்டுகளும் கூட தென்பட்டது.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டு நடந்து கொண்டு இருந்தாள் திவ்யா. வெகு அருகில் ஒரு சிவப்பு நிறசேலை ஒன்றின் பாதி மட்டும் கிழிந்து தன்னகத்தே எதையோ சுருட்டி வைத்து இருந்தது. அவசரமாக சென்று அந்த துணியை எடுத்து அகற்றி பார்த்தாள் திவ்யா. வேகமாக ஓடிவந்த அந்த சின்ன பொண்ணு ஒரு சாப்பாட்டு பொதியை அணைத்தபடி படுத்திருந்தாள். வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டியபடி அவளது மூக்கின் அருகே கையை வைத்து பார்த்தாள் திவ்யா. அந்த சின்ன பெண்ணின் மூச்சு நின்று
விட்டு இருந்தது.என்ன செய்வது என்று தெரியாத நிலையில் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கு கெடுத்து ஓட திக்பிரமை பிடித்தது போல அமர்ந்து இருந்தாள் திவ்யா.

எங்கோ ஒரு வானொலில் இருந்து "வந்தே மாதரம்" என்ற பாடல் அவளின் காதில் விழுந்தது......

எழுதியவர் : nilakavi (30-Sep-12, 2:11 am)
பார்வை : 493

மேலே