மன்னனின் வேட்டை

ஒரு அடர்ந்த காட்டில் சிறந்த ஞானம் மிக்க ஒரு முனிவர் மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் அந்த ஞானியானவர் எல்லா மிருகங்களிடமும் அன்போடு பழகுவார். மேலும், உடல் நலமில்லாத மிருகங்களுக்கு தன் தவ வலிமையால் மூலிகைச்சாறு கொண்டு மருத்துவம் செய்வார் இதனால் கொடிய குணம் கொண்ட புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் எல்லாம் அந்த ஞானியை தினந்தோறும் வந்து வணங்கிச் செல்லும்.

இப்படி நடந்து கொண்டிருக்கும் வேளையில் பக்கத்து நாட்டு மன்னன் வேட்டை என்ற பெயரால் காட்டில் வாழும் விலங்குகளை எல்லாம் கொன்று குவித்து வந்தார். இப்படி காட்டில் வாழும் மிருகங்களின் எண்ணிக்கை குறையக் குறைய காட்டில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது மனிதர்கள் எல்லாம் அங்கேயே வீடுகட்டிக் கொண்டும் காட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி விற்பனை செய்தும், முயல், மான் போன்ற சாதுவான பிராணிகளை கொன்று புசித்து கொண்டும் வாழத் தொடங்கினார்கள். காடு மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது. நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. அப்பொழுது சைவ உணவையே உண்டு வாழும் ஒருமுயல் குட்டி தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் முன் வந்து கை கட்டி நின்றது.

அதைப் பார்த்த முனிவர் முயல் குட்டியை நலம் விசாரித்தார். ”ஐயா! மனிதர்கள் எல்லோரும் என் போன்ற சாதுவான பிராணிகளைக் கொன்று புசிக்க தொடங்கி விட்டார்கள். நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. இதற்கு தாங்கள் தான் ஒரு உபாயம் செய்ய வேண்டும் என்றது முயல். இதைக் கேட்ட மாத்திரத்தில் முனிவரின் கண்களில் நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது, முனிவர் இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

அப்பொழுது காயப்பட்டு நலிந்த உடலோடு ஒரு நரி அவ்வழியாக வந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த முனிவர் அந்த நரியை தன்னருகில் அழைத்து அதற்கு மருந்து போட்டு குணப்படுத்தினார். தன் உடல் முழுமையும் குணம் அடைந்த நரி முனிவரைப் பார்த்து, ”ஐயா! நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்றது. நீதான் தந்திரத்தில் சிறந்தவன் ஆயிற்றே பக்கத்து நாட்டில் வசிக்கும் மன்னனிடம் சென்று தந்திரமாகப் பேசி காட்டில் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருக்கிறார் அவரிடம் சென்றால் சிறிய நாட்டை ஆளும் தாங்கள் பேரரசனாக வாழாலாம் என கூறு” என்றார். முனிவர். ”அப்படியே செய்கிறேன” என்று முனிவரிடம் விடைபெற்ற நரி நாட்டை நோக்கி புறப்பட்டது.

அரண்மனையை வந்தடைந்த நரி, வாயிலில் நிற்கும் காவலாளியை பார்த்து, ”ஐயா! நான் வெகுதொலைவில் இருந்து வருகிறேன். அரசருக்கு ஒரு முக்கியமான செய்தி கொண்டு வந்துள்ளேன். அவரை அவசரமாகப் பார்க்க வேண்டும்.” என்றது. காவலாளியும் மன்னர் உள்ள அறைக்கு வழி சொல்லி, ”நீ சீக்கிரம் செய்தியைக் கூறி வா” என்று அனுப்பினார்.

நரி உள்ளே சென்று, முனிவர் கூறிய செய்தியை மன்னரிடம் கூறியது. நரி கூறிய செய்தியைக் கேட்ட பேராசை கொண்ட மன்னன் காட்டிற்கு நரியுடன் புறப்பட்டான். மன்னன் வருவதை உணர்ந்த முனிவர் மன்னனுக்கு நற்சிந்தனை வர அவன் வரும் போதே அவனுக்கு வியாதியை வரவழைத்தார். வியாதியால் அவதிப்பட்ட உடலோடு முனிவர் இருப்பிடத்தை அடைந்தான் மன்னன்.

மன்னன் முனிவரைப் பார்த்து ”ஐயா! எனக்கு காய்சல் வந்து விட்டது என்னால் எப்படி பக்கத்துக்கு நாட்டோடு போரிட்டு ஜெயிக்க முடியும்” என்று சொல்லிக் கொண்டே அவரின் காலில் விழ்ந்து வணங்கினான். முனிவர் மன்னனைப் பார்த்து, ”நீங்கள் காட்டில் வாழும் முயல், மான் போன்றவற்றின் இறைச்சிகளை உண்பிர்களா?” என்று கேட்டார். ”ஆமாம்” என்றான் மன்னன். ”அதுதான் உங்கள் வியாதிக்குக் காரணம். இன்று முதல் நீங்கள் சைவ உணவையே உண்டு வாருங்கள். நீங்கள் முன்பிருந்ததை விட அதிக பலம் அடைவீர்கள்.” என்றார் முனிவர்.

மன்னனும் முனிவர் கூறியது போல் சைவ உணவையே உண்டு மகாபலம் வாய்ந்தவனாக விளங்கினான். தன் நாட்டு மக்களையும் சைவ உணவையே உண்ண வேண்டும் என்று வலியுறுத்தினான். இதனால் நாட்டில் சைவ உணவுக்கான விவசாயம் பெருகியது. சாதுவான விலங்குகளுக்கும் தடையில்லாமல் உணவு கிடைத்தது. அவையும் பிழைத்துக் கொண்டன. நாடும் செழித்தது.

எழுதியவர் : குணா (26-Oct-12, 3:48 pm)
சேர்த்தது : dine
பார்வை : 300

மேலே