எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
மனிதத்தைக் கட்டிக்காத்த ஷைல் தேவி 'அம்மா' ! - வரலாறு பேசட்டும்!!
எண்ணம் முளைக்க வைத்த செய்தி கீழே.
மனித மேன்மை, மெய்ஞானம், அகண்ட அறிவு என இந்த மண்ணின் நறுமணங்களின் ஊடே சீழ் வாசம் வர எந்தெந்த அடிப்படைவாதிகள் காரணமோ திருந்துங்கள்!
மறுபிறவியை யாரும் உணர்ந்ததில்லை! நவீன உலகில் உயிராபத்து கூடிய நிலையில் அடுத்த நாளும் நமக்கு கிடைக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அப்படி இருக்கையில் உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?!!
வீரம் என்றும் கடமை என்றும் மூளைசலவை செய்யும் அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து தப்பித்து உங்கள் வாழ்க்கையையும் - குடும்பத்தையும் அன்புடன் மகிழ்வுடன் அனுபவியுங்கள்.
நர (...)
'மாதொருபாகன்' தமிழ் இலக்கியத்திலும் ஒருபாகம்தான்!!!!
தனது வாழ்க்கை புழங்கிய வட்டாரத்தை, யதார்த்தமாய் கதைபுனைந்து பதிவது ஒரு குற்றமா?
பெருமாள் முருகனை நாளை வரலாறு பாராட்டுவது இருக்கட்டும்! பெரும் ஆய்வுக்குப் பிறகு தமிழ் மண்ணின், ஒரு சமூகத்தின் கலாசாரத்தை அச்சுஅசலாக பதிந்துவரும் எழுத்தாளரை தமிழ் இழக்கப்போகிறதா? இதுவரை யாரும் எழுத்தில் பதியாத விஷயத்தையா, தானாக கற்பனைசெய்து கதைகட்டிவிட்டார்?
வார்த்தைகளில் விரசம், தமிழ் பெண்களை அவதூறாக பேசினார் என்கிறார்கள். மாதொருபாகனை எதிர்ப்பு நிலையில் அணுகாமல், வரிக்குவரி படித்துவிட்டு வந்து பேசுங்கள்!
நம்மில் நூற்றுக்கு தொண்ணூறு வீடுகளில் புழங்கும் 'கெட்ட' வார்த்தைகளைதான் பாவனை கலக்காமல் பதிந்திருக்கிறார். ஆனால் மஞ்சள் பத்திரிக்கைகள்போலத் திணிக்கவில்லை.
குழந்தையில்லா 'வறட்டுப்' பெண்களின் அவலத்தை, (அது இயற்கையின் சதி என உணராது) அவர்கள் மீது உமிழப்படும் வார்த்தை அமிலத்தைத்தான் எழுதியிருக்கிறார்.
குழந்தைக்கு ஏங்கும் தம்பதியின் விரக்தி, சுற்றத்தார் ஆதங்கம், ஊராரின் காழ்ப்பு, சொந்தங்கள் நடுவே சொத்துக்கள் படும்பாடு, கிராமத்து இளைஞர்களின் விளையாட்டு - விடலைத்தனம் - அறிவு - பொறுப்பு, சென்ற நூற்ற்றாண்டின் ஆரம்பகால சமூக வாழ்க்கை என கொங்கு தமிழ் வார்த்தை புழக்கத்துடன் ஆய்வும் அனுபவமும் கூடி, கற்பனை மாந்தர்களோடு ஆவணப்படுத்தி இருக்கிறார். அவற்றை சிலாகிக்க முடியாதவர்களுக்கு எழுத்து என்பது காததூரம் தள்ளித்தான் இருக்கமுடியும்.
இலக்கியத்துடன் மனிதம் புரிந்த, நல்ல எழுத்தாளர்கள் ஆதரவு கருத்துக்களை பெருமாள் முருகனுக்காக பதிந்துள்ளார்கள். மற்ற எழுத்து வாசம் அனுபவிப்பவர்களும், எழுத்தை சுவாசம் என நினைப்பவர்களும் எங்கே போய்த் தொலைந்தார்கள்? பிரபல எழுத்தாளருக்கு என்றால் மட்டும் அணிசேர்ந்து மக்கள் கவனம் ஈர்க்க முன்வந்து நிற்பார்களோ?
எழுத்துலகில் திரியும் சில கழுதைபுலிகளுக்குக் காகிதவாசம்கூட நிஜத்தில் பிடிக்குமோ இல்லையோ; அல்லக்கைகளை அணிசேர்த்து, அரசியல் குள்ளநரிகளுக்குப் பின்சென்று, எழுத்தில் வல்லோரைக் காட்டிக்கொடுக்க, குப்புபுறத்தள்ளி குழிபறிக்க, குறுக்குச்சால் ஓட்டி 'நானும் பிரபலம்தான்' என வண்டியேற ரொம்பப் பிடிக்கிறது.
மதவெறியில் திளைக்கும் கீழ்நிலை மனிதர்களோ, அச்சடித்த எந்த காகிதம் ஆனாலும் அது கைதுடைக்கமட்டும் என புரிந்துவைத்திருப்பார்கள். அந்த அற்பஜீவன்களின் அரசியல் வெறி - சூழ்ச்சிகள் மேற்சொன்ன கழுதைபுலிகளுடன் கைகோர்க்கிறது. இங்கே ஒரு யதார்த்த இலக்கியம் தோற்கிறது.
ஊரே மறைமுகமாக ஆதரித்த - பிள்ளைபேறில்லாத பெண்களுக்கு மட்டுமென - நிஜத்தில் நடந்த 'சாமி (கொடுத்த) புள்ளை'-க்கே பொங்குகிறார்களே, இவர்களுக்கு "விருந்தாளிக்கு பொறந்தவனே" என்ற இன்னொரு பதம் தெரியுமா? வேத காலம் தொட்டு அதிதிகள் (குறிப்பாக சிவனடியார்கள்) தேவனுக்கு சமம் என்று சொல்லிக்கொண்டு சாமானியர் வீடுகளில் புகுந்து செய்த சில்லறை தனங்கள் தெரியுமா? அப்படி பிறந்த பிள்ளைகளுக்கான அடைமொழியும் அவாளால் அருளப்பட்டதுதானே?
பிராமணனுக்கு பசுமாட்டுக்கறி, சிவனடியாருக்கு பிள்ளைக்கறி, பத்தினி உடன்கட்டை ஏறுதல், தேவரடியார் விதிமுறைகள் எல்லாம் வேதத்தில், புராணத்தில் படிப்பது இனிக்கிறது இவர்களுக்கு. அந்த பதிவுகளை சிலாகித்து அலமாரிகளில் பூட்டி வைத்து பூஜை செய்வார்கள். அவை எப்படி காலத்தால் - பௌத்தம்-சமணம் ஊடாடியதில், நாகரிகம் பண்பட்டதில் - அழிந்து போனதோ அதேபோல சமீபத்தில் மறைந்த ஒரு சமூகப்பழக்கம் 'சாமி கொடுத்த புள்ள' - அதை பெருமாள் முருகன் ஆவணப்படுத்தியது எப்படி தவறாகும்?
வறடிகளுக்கு மட்டும் அந்தகால சமூகம் கொடுத்த சலுகைக்கு, சாதாரண பெண்களையும் குறிப்பதாக சொல்லி இன்றைக்கு மக்களை தூண்டிவிட்டது, அந்த அர்த்தம் தெறிக்கும் வகையில் சுவரொட்டிகள்மூலம் யோசிக்க வைத்தது - எவ்வளவு கேவலமான செயல். ஒரு கதை படிக்கக்கூட தெரியாத இவர்களுக்கு ஏன் இந்த வீண் வேலை.
காந்தியை கொன்றதால் இந்தியாவில் மதநல்லிணக்த்தை அழித்துவிட முடியவில்லை! ஒற்றுமை இன்றும் வீறுகொண்டே நிற்கிறது!! பெருமாள் முருகனின் 'எழுத்து-ஆத்மா'-வை கொன்றுவிடுவதால் இனியும் கிளம்பி வரவிருக்கும் நவீன ஆவண இலக்கியங்களை கருவருத்துவிட இயலாது.
அப்பாவி மக்கள் உணர்வுகளுக்குள் செய்வினை வைப்பவர்கள் அது நாளைக்கு உங்களை வேறுவடிவில் திருப்பி தாக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாள்முனையை விட எழுத்தாணிமுனை வலிமையானது.