எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மண்ணில் பூத்த
வைரமே....
உன் இதழில்
இருந்து வரும்
சொற்கள் எல்லாம்
முத்துக்கள்.....
நீ எழுதும் 
ஒவ்வொரு எழுத்தும்
கவிதை தான்...!
சொந்த மண்ணைவிட்டு
சென்ற நீ
பிறந்த மண்ணை
மீண்டும் வந்து
மிதித்த போது
எத்தனை ஆனந்தபட்டாய்
என்பது
உன் விழிகளில் 
இருந்து சிந்திய
கண்ணீர் துளிகள் 
காண்பித்தன...!
பிறந்த மண்ணை விட்டு
பிரிந்து சென்ற வருத்தமா...?
இல்லை
மீண்டும் வந்ததால் வந்த
ஆனந்த கண்ணீரா...?
உம்மை போன்று
மண்ணை நேசிப்பவனும் இல்லை...
காணும் ஒவ்வொன்றுக்கும்
கவிதை உயிர் கொடுத்து
வாசகர்களின் கண்முன்
உலாவ விடும் கவிஞனும் இல்லை...!

     கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் என்ற இரு நூல்களின் பொருட்டு தேனியில் 4.8.2007 அன்று " இரட்டை காப்பிய திருவிழா " நடந்தேறியது.

     அன்று நானும் அந்நிகழ்ச்சியில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது எங்கள் கல்லூரியில் இருந்து அழைத்துச் சென்றனர். நிகழ்ச்சி முடியும் தறுவாயில் நான் இக்கவிதையை எழுதினேன் அவரிடம் காண்பித்து அவரது கையெழுத்தை பெற வேண்டும் என்ற (நற்)ஆசையில் ஆனால் விழா முடிந்தது தான் தாமதம் எங்களை உடனே அழைத்துச் சென்றுவிட்டனர். 
இக்கவி கவிஞர் திரு வைரமுத்து அவர்களுக்காக.....

மேலும்

மிக்க நன்றி ஐயா...! 14-Feb-2017 5:49 pm
தங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா..! 14-Feb-2017 5:49 pm
9 ஆண்டாக கவிதை தங்கள் மலரும் நினைவாக படைத்தற்கு மனமார்ந்த நன்றி போற்றுதற்குரிய இலக்கிய படைப்பு தொடரட்டும் தங்கள் கைவசம் உள்ள அனைத்து கவிதைகளை நாங்கள் படிக்க ஆவன செய்யவும் பாராட்டுக்கள் -------------------------------------- கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் & ,கவிதை கதைத் தொகுப்பு அனைத்தும் நாம் படிப்போம் பகிர்வோம் 24-Dec-2016 4:55 pm
சொந்த மண்ணைவிட்டு சென்ற நீ பிறந்த மண்ணை மீண்டும் வந்து மிதித்த போது எத்தனை ஆனந்தபட்டாய் என்பது உன் விழிகளில் இருந்து சிந்திய கண்ணீர் துளிகள் காண்பித்தன...! பிறந்த மண்ணை விட்டு பிரிந்து சென்ற வருத்தமா...? இல்லை மீண்டும் வந்ததால் வந்த ஆனந்த கண்ணீரா...? ******************************************* பிறந்த ஊரை விட்டு பிழைப்பிற்க்காக வெளியேறும் பெரும்பாலானவர்களுக்கு இந்த உணர்வு பொருந்தும்e (தங்களை போலவே அடியேனுக்கும் 1997 வருடம் அருகில் நின்று பார்க்கும் பாக்கியம் கிடைத்தது), அருமை, வாழ்த்துக்கள், - மு.ரா. 24-Dec-2016 3:08 am

தமிழ் மொழியின் பெருமை.....!

*  ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப்பெற்று வந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே நம் தாய் மொழியான தமிழ் மொழியின் தொன்மைக்கு சான்று.

*  2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன. 

*  2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.

*  2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் ‘நற்றிணை’ என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது.

*  3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாக நம்பப்பெறுகிற நூல்களில் ‘அகத்தியம்’ எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. 

*  3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் ‘தொல்காப்பியம்’ ஒன்றே. 

*  உலகில், பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது. 

*  இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.

*  வேறு எந்த மொழியையும் பெயராக சூட்டிக் கொள்ள முடியாது தெலுங்கு, ஹிந்தி,....... என்று ஆனால் நம் தாய் மொழியான தமிழை பெயராக சூட்டிக் கொள்ள முடியும் தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ் மாறன்.... என்று.

*  உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.

ஆனால் நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும்.

1.தொன்மை (Antiquity)
2.தனித்தன்மை (Individuality)
3.பொதுமைப் பண்பு (Common Characters)
4.நடுவு நிலைமை (Neutrality)
5.தாய்மைத் தன்மை (Parental Kinship)
6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)
7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)
8.இலக்கிய வளம் (Literary prowess)
9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)
10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)


 தமிழின் பெருமையை சான்றோர்கள், அறிஞர்கள், மேலை நாட்டவர்கள் என பலரும் கூறியவவையாவன:

★  தமிழ்மொழிப் புணர்ச்சிகட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறமாட்டா.
- சிவஞானமுனிவர்

★ நம்மைப் பெற்றதும் தமிழ்; வளர்த்ததும் தமிழ்; நம்மைத் தாலாட்டுத் தூங்க வைத்ததும் தமிழ்... இப்படிப்பட்ட அருமையான மொழியை விட்டுவுட்டுச் சமற்கிருதம் இலத்தீன் முதலிய அயல்மொழியைப் படிக்கிறார்கள். சுற்றத்தார்களை விட்டுவிட்டு அயலாரை நேசம் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். – நயனரசர் வேதநாயகர்

★ தமிழ்மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக அமைந்தது - ஆபிரகாம் பண்டிதர்

★ தமிழ் உயர்தனிச்செம்மொழி – பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாத்திரியார்)

★ தமிழைப்போலும் கொத்துக் கொத்தாய்க் கூடி இயலும் சொற் பரப்பைக் கொண்ட ஒரு மொழி நாம் அறிந்தவற்றுள் வேறின்று. - ஞானப்பிரகாசர்

★ எம்மொழிக்கும் ‘பித்ரு’ மொழி தமிழ் – இராமலிங்க வள்ளலார்

★ “தான் பிறரால் பெறுவதை விட அதிக வெளிச்சத்தைப் பிறருக்கு அளிக்கும் மொழி தமிழ்” - ராபர்ட் கால்டுவெல்

★ "கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி”
-ஐயனாரிதனார் 

★ “தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்

★ தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.

★ திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்

தமிழின் பெருமையை உணர்த்தும் சங்க கால நூல்கள்: 

@  “ என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”
“ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”
என்றுமுள தென்றமிழ்! – கம்பராமாயணம்

@  "எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் இன்தமிழ்!" -  பெரியபுராணம்.

@  "நல்லதமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்!" – நாலாயிரத் தெய்வியப் பனுவல்

@  "கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ?"
– திருவிளையாடற் புராணம்

@  "கொழி தமிழ்ப் பெருமையை யார் அறிவார்?" - மதுரைக் கலம்பகம்

@ "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்" - தமிழ்விடு தூது.

@  "ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேர் இலாத தமிழ்" -  தண்டியலங்காரம்

@  "ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!"
- மனோன்மணீயம்

@  "அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்" - புறநானூறு

@  "ஆடல் பாடல் இசையே தமிழே" - சிலப்பதிகாரம்

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ(து)
எங்கும் காணோம்!" என்று பாரதியாரும்

"தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்!" என்று பாவேந்தரும் தமிழின் பெருமையை தங்களின் பாடல்கள் மூலம் கூறியுள்ளனர்.

தமிழராய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்..! தமிழின் பெருமையை உணர்வோம்...! தமிழை போற்றி வளர்த்திடுவோம்...! 

வாழ்க தமிழ்...!

மேலும்

தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா...! 14-Feb-2017 5:42 pm
மிக்க நன்றி ஐயா...! 14-Feb-2017 5:41 pm
தமிழ் மொழியின் ஈடில்லாச் சிறப்பினை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள் .பகிர்கிறேன் . பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தமிழ்ப் பிரிய நித்யஸ்ரீ அன்புடன்,கவின் சாரலன் 24-Dec-2016 10:11 am
* இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ். * வேறு எந்த மொழியையும் பெயராக சூட்டிக் கொள்ள முடியாது தெலுங்கு, ஹிந்தி,....... என்று ஆனால் நம் தாய் மொழியான தமிழை பெயராக சூட்டிக் கொள்ள முடியும் தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ் மாறன்.... என்று. *********************** excellent / touching - மு.ரா. 24-Dec-2016 3:21 am

வணக்கம்,
                  கவிதைகளை வாசித்து நேசித்த நான் இன்று முதல் முறையாக கவிதைகள் எழுதுவதற்கு முதல் அடியை எடுத்து வைத்துள்ளேன் இந்த எழுத்து தளத்தில். இலக்கண இலக்கியங்கள் தெரியாது நான் எழுதுவது கவிதை தானா என்று கூட தெரியாது மனதில் தோன்றியவற்றை வார்த்தைகளால் கோர்த்து வரிகளாக்கி கவிதை என தருகின்றேன். எழுத்து தளத்தில் கடந்த 20 நாட்களாக எனது படைப்புகளை பதிவேற்றியுள்ளேன் அவற்றை படித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. பட்டை தீட்ட தீட்ட வைரம் மின்னுவது போல கருத்துக்கள் வருவதை பார்க்கும் போது இன்னும் நிறைய கவிதைகள் எழுத வேண்டும் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற உற்சாகம் பிறக்கின்றது. இத் தளத்தின் மூலம் நண்பர்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. எனது படைப்புக்களை பார்வையிட்டவர்களுக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது கவிதை எழுத வேண்டும் என்று எண்ணி இணையதளத்தில் பார்த்துக்கொண்டிருந்த போது தற்செயலாக என் கண்களில் பட்டது எழுத்து.காம் கவிதை எழுதி அனுப்பி பார்க்கலாம் என்று எண்ணி அனுப்பினேன் அந்த படைப்பு சற்று நேரத்தில் தளத்தில் இணைக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் அதன் பின்னர் எழுத ஆரம்பித்தேன் எனது முகப்பில் வாசகர் என்ற இடத்தில் எழுத்தாளர் என மாறியிருந்தது அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது இதற்கு முழு முதல் காரணமாகிய என் இறைவனுக்கு பல்லாயிரம் கோடி நன்றிகள். படைப்பாளிகள், ஆன்றோர், சான்றோர் எனது படைப்பில் தவறு இருப்பின் அதை சுட்டிக்காட்டி அல்லது தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- நன்றி


- நித்யஸ்ரீ

மேலும்

நன்றி தோழியே..! 15-Feb-2016 5:36 pm
தொடருங்கள் நட்பே ! வாழ்த்துக்கள் 15-Feb-2016 4:08 pm
விதைப்பது நாம் எண்ணங்கள். விளைவது கவிதைகள். இப்படித்தான் ஒவ்வொரு கவிஞன் என்பவன் உருவெடுத்து வளர்ந்து பெரிய அளவில் பேசப்படுகிறார்- உண்மை தான். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..! 15-Feb-2016 10:15 am
தங்கள் வருகைக்கு நன்றி ... நிச்சயம் அனைத்து தலைப்புகளிலும் எழுத முயற்சி செய்கின்றேன். தங்கள் வாழ்த்துக்கும் நன்றி..! 15-Feb-2016 10:12 am

இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா! 
இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன் 
இழந்தது எவை என இறைவன் கேட்டான்! 
பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்
பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்? 
கால மாற்றத்தில் இளமையை இழந்தேன் 
கோலம் மாறி  அழகையும் இழந்தேன் 
காதலித்து அவளிடம் இதயம் இழந்தேன் 
காணாமல் போனாளே அவளை இழந்தேன் 
வயதாக ஆக ஆக உடல் நலம் இழந்தேன் 

எதை என்று சொல்வேன் நான் 
இறைவன் கேட்கையில்? 
எதையெல்லாம் இழந்தேனோ 
அதையெல்லாம் மீண்டும் தா என்றேன். 
அழகாகச் சிரித்தான் இறைவன்
”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்"
"உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்"
"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"
"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்" 
சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல 
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான். 
திகைத்தேன்! 
இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன் 
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்
இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன் 
இறைவன் மறைந்தான்.


- படித்ததில் பிடித்தவை

மேலும்

சில நேரங்களில் " கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்" என்ற தசாவதார சினிமா வசனம்தான் நினைவிற்கு வருகிறது - மு.ரா. 03-Feb-2016 10:00 pm

இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். 
காலையில் எல்லாம் மாறிவிட்டன. பால் பாக்கெட் இல்லை. பேப்பர் இல்லை. இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லையென்றால் எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது?
மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க… 'எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா, எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக்கிட்டோம்' என்று உணவுப்பொருட்களைப் பதுக்கிக்கொண்டார்கள். 
வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட, நாடு முழுவதும் உணவுப்பொருட்களைத் தேடி ஓட ஆரம்பித்தார்கள். ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன.
கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன. அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப் பட்டது. பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்துக்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது.
எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும், மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும் மாதக் கட்டணமாகத் தங்கம் பெறப்பட்டது.
நாடே போர்க்களம் போல் அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்க… விவசாயிகள் மட்டும் எந்தவித பதற்றமோ சலனமோ இன்றி எப்போதும்போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். வாரச் சந்தைகளில் விவசாயிகளிடம் அரிசி, பருப்பு வாங்க, நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள். உணவுப் பொருட்களுக்காக பங்களா, கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது.
வேலை தேடி எல்லோரும் கிராமங்களுக்குச் செல்ல... மூன்று வேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்துக்குத் தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டன.
ஒட்டுமொத்த தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு, அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின. அரசுக்குத் தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாகப் பெற்றார்கள். நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது.
விவசாயத்தின் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்ததால், நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டது. வறண்ட பூமியெல்லாம் தவறாது மழை பெய்ததால் விவசாய நிலங்களாக மாறின. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால், மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!
பணம் எனும் மாய வலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப் பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது.
தயவுசெய்து குறட்டையை நிறுத்திவிட்டுக் கொஞ்சம் கண்விழித்துப் பாருங்கள்… இது கனவுதான். ஆனால், எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை. சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை
இந்தக் கனவும் அப்படித்தான்...
உயிரற்ற காகிதத்தால் ஆன காசிற்காக, 
உயிருள்ளமனித இனமே,மனிதஇனத்தை அழித்துகொண்டிருக்கிறது.எங்கும் கலப்படம்,எதிலும் கலப்படம்.
பணம் என்பது எந்த மனதையும் மயக்கும் மாயப் பேய். பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய, பணத்துக்கு நாம் அடிமையாகக் கூடாது! 
- வாட்ஸ் அப்பில் வலம் வந்தது.

மேலும்

மிக்க நன்றி....! 03-Feb-2016 9:02 pm
நன்றி...! 03-Feb-2016 9:02 pm
நல்ல பகிர்வு.. 03-Feb-2016 5:57 pm
அருமை, விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் இந்த பகிர்விற்கு வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகுக - மு.ரா. 03-Feb-2016 5:15 pm

மேலே