எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கொலை செய்தோம் பாவலர் கருமலைத்தமிழாழன் தாலாட்டித் தூங்கவைத்த தளிர்கரங்கள்...

கொலை செய்தோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

தாலாட்டித் தூங்கவைத்த
தளிர்கரங்கள் தளர்ச்சியிலே
கோலூன்றி வரும்போது
கொடுத்துதவ யாருமில்லை !

நோன்பியற்றிப் பால்தந்து
நெகிழ்ந்தவளை உடல்தளர்ந்து
கூன்முதுகாய்க் குனிந்தபோது
கூட்டிவர யாருமில்லை !

மதிகாட்டி அமுதூட்டி
மகிழ்ந்தவளை மனம்தளர்ந்து
முதிர்நிலையில் மகிழ்வூட்ட
முன்வருவோர் யாருமில்லை !

சான்றோனாய் வளர்த்தவளை
சாதித்துத் தளர்ந்தபோது
தேன்மொழியால் அரவணைத்துத்
தேற்றுவோர்கள் யாருமில்லை !

மனிதனாக்கி மணமுடித்து
மதிப்புயர உழைத்தவளை
கனிவுடனே முதுமைதனில்
காப்பவர்கள் யாருமில்லை !

எல்லாமும் பிள்ளைக்காய்
இழந்தவளை முதியோரின்
இல்லத்தில் தள்ளுகின்ற
இழிசெயலால் கொலைசெய்தோம் !

நாள் : 2-Oct-14, 12:02 pm

மேலே